வெள்ளி, 28 ஜூன், 2019

1314. பாடலும் படமும் - 68

பரசுராம அவதாரம் 

[ஓவியம்: எஸ்.ராஜம் ]
திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

வடிவாய் மழுவே படையாக 
  வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட 
  பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக் 
  கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.



உரை:

கூர்மை பொருந்திய வாயையுடைய கோடாலியையே ஆயுதமாகக் கொண்டு (பரசுராமனாய்த்) திருவவதரித்து இருபத்தொரு தலைமுறையளவும் பூமியில் நிறைந்திருக்கிற க்ஷத்ரியர்களாகிற விரோதிகளை தொலைத்த மிடுக்குடையனான எம்பெருமானை, வண்டுகளானவை குடும்பமாக (மதுவை) எடுத்துப் பருகும்படியாக அழகிய நீலோற்பல மலர்கள் மதுவை பெருகச்செய்யப் பெற்ற பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய திருக்கண்ணபுரத்தில் அடியேன் கண்டுகொண்டேன்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: