புதன், 18 ஆகஸ்ட், 2021

1920. கல்கி - 21

காந்திமதியின் காதலன் -1

கல்கி 



ஆனந்தவிகடனில் 1935-இல் வந்த கதை. மணியத்துடன் ஓவியங்களுடன் பின்னர் கல்கியில் மீண்டும் பிரசுரிக்கப் பட்டது.

 ======


"ஸ்வாமி! இந்தக் கட்டை கேட்கிறதேயென்று வித்தியாசமாய் நினைக்க வேண்டாம்; ஸ்வாமியின் மனத்தில் சாந்தி ஏற்படவில்லையென்று இந்த ஜடத்துக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இது தவறாயிருந்தாலும் இருக்கலாம். அப்படி ஏதாவது ஸ்வாமி மனத்தில் இருந்தால் இந்தக் கட்டையிடம் சொல்ல யோசிக்க வேண்டாம்" என்று பெரிய ஸ்வாமியார் சின்ன ஸ்வாமியாரிடம் சொன்னார். "ஸ்வாமி சொல்வது நிஜம்; இந்தக் கட்டைக்கு இன்னும் மனச் சாந்தி ஏற்படவில்லை. இதன் மனத்திலே ஒரு பந்தம் இருக்கிறது; ஒரு தாபம் இருக்கிறது. அது இந்தக் கட்டையுடனேதான் தீருமோ, என்னவோ தெரியாது" என்றார் சின்ன ஸ்வாமியார்.

தன்னுடைய எல்லைக்குள்ளே உயிரை விடுவோர் அவ்வளவு பேரையும் மோக்ஷத்துக்கு அனுப்பக்கூடிய மகிமை வாய்ந்த ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தில் தமிழ்நாட்டுப் பெரிய மடங்களுக்குச் சொந்தமான கிளை மடங்கள் பல இருக்கின்றன. அந்த மடங்களில் ஒன்றிலேதான், மேலே கூறியவாறு இரு ஸ்வாமியார்களுக்குள் சம்பாஷணை ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் கொஞ்சம் வயதானவர்; ஐம்பது ஐம்பத்தைந்து இருக்கலாம். அவருடைய திரு மார்பை நீண்டு வளர்ந்த தாடி மறைத்திருந்தது. முகத்தில் ரோமத்தினால் மறைக்கப்படாதிருந்த பாகமெல்லாம் அம்மைத் தழும்பு நிறைந்து கோரமாய்க் காணப்பட்டது. ஆனாலும் அவர் முகம் பார்ப்பதற்கு அருவருப்பு அளிக்கவில்லை. அந்த கோரத்திலும் ஒரு திவ்ய களை இருந்தது. அவரது ஆழ்ந்த கண்களில் சாந்தி குடிகொண்டு விளங்கிற்று. இந்தப் பெரிய ஸ்வாமியார் பல வருஷ காலமாக மேற்படி கிளை மடத்தில் தலைவராயிருந்து வருபவர். தென்னாட்டிலிருந்து காசிக்கு வரும் தமிழர்களில் அநேகர் இந்த மடத்தில் வந்து தங்குவதுண்டு. அவர்களுக்கெல்லாம் வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுப்பார். இதனாலெல்லாம், ஸ்வாமி பிரணவானந்தரின் புகழ் விஸ்தாரமாய்ப் பரவியிருந்தது.

இந்த மடத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஸ்ரீகுமாரானந்தர் என்னும் மற்றொரு தமிழ் ஸ்வாமி வந்து சேர்ந்தார். இவருக்குப் பிராயம் சுமார் 35க்கு மேல் 40க்குள் இருக்கலாம். இவர் ஜடை, தாடி முதலியவை வளர்க்காமல் நன்றாய்த் தலையை மொட்டையடித்து முக க்ஷவரமும் செய்து கொண்டிருந்தார். பெரிய ஸ்வாமியார் இவரை அன்புடன் வரவேற்று, வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுத்தார். குமாரானந்தரிடம் ஒரு விசேஷத்தைப் பெரிய ஸ்வாமியார் கண்டார். குடும்பஸ்தன் ஒருவனைவிட அதிகமாக அவருக்கு உலக விவகாரங்களில் சம்பந்தம் இருந்தது. கடிதப் போக்கு வரவு அவருக்கு அசாத்தியம். முக்கியமாய், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுடன் அவருக்கு அதிக உறவு இருந்தது. ஓயாமல், ஏதாவது கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். பத்திரிகைக்காரர்களிடமிருந்து அவருக்கு ஐந்து ரூபாய், மூன்று ரூபாய், ஒன்றேகால் ரூபாய் இப்படிச் சின்னத் தொகைகளாக மணியார்டர்கள் வரும். அத்தொகைகளை அவர் வாங்கிக் கொண்டு தாம் ஒரு விலாசத்துக்கு 15 அல்லது 20 ரூபாய் மணியார்டர் செய்வார். ஒரு மாதத்தில் சரியானபடி மணியார்டர்கள் வராவிட்டால், கோபம் வந்துவிடும். தமிழ்ப் பத்திரிகை நடத்துவோர்களைக் கண்டபடி திட்டுவார்.

இவற்றையெல்லாம் கவனித்துத்தான் பெரிய ஸ்வாமியார், தலைப்பில் கண்டவாறு சம்பாஷணை துவக்கினார். அவர் மேலும் கூறியதாவது:

"எத்தனையோ பேர் தங்களுடைய மனக் கவலைகளை இந்த ஜடத்திடம் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கட்டை அவர்களுக்குத் தக்க உபதேசம் செய்து, மனச் சாந்தி உண்டாக்கியிருக்கிறது. ஸ்வாமியும் மனத்திலிருப்பதைச் சொன்னால், அதை நிவர்த்திக்க முடியுமா என்று பார்க்கலாம்."

குமரானந்தர் மோன வெளியில் கலந்திருந்தார். எனவே பிரணவானந்தர் மறுபடியும் கூறியதாவது:

"ஒரு வேளை ஸ்வாமிக்குப் பூர்வாசிரமத்திலே குழந்தைகள் இருந்து எங்கேயாவது விட்டு வந்திருக்கிறதோ? அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்குத் தக்க ஏற்பாடு செய்து விடலாமே!"

குமாரானந்தர் இப்போது வாய் திறந்தார். அவர் சொன்னதாவது: "ஸ்வாமி ஊகித்தது பாதி வாஸ்தவம். ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அது இந்த ஜடத்தின் குழந்தையல்ல. வேறொருவரின் குழந்தை. இந்த ஜடத்தின் கழுத்தில் அதை கட்டியிருக்கிறது. அதனால் தான் துளிக்கூட இந்தக் கட்டைக்கு மனச் சாந்தி இல்லாமல் போகிறது. தலைவிதி! தலைவிதி!" என்று படீர் படீரென்று மொட்டைத் தலையில் போட்டுக் கொண்டார்.

பெரிய ஸ்வாமியார் அவரைச் சாந்தப்படுத்தி ஆதியோடந்தமாய் அவருடைய வரலாற்றை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே குமாரானந்தர் அவ்வாறே கூறத் தொடங்கினார். அவர் கூறியபடியே ஸ்வாமியார்களின் பரிபாஷையை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே எழுதுகிறேன்:

1

பூர்வாசிரமத்தில் எனக்கு விருத்தாசலம் என்று பெயர். என் பெற்றோர்களுக்கு நான் ஒரே பிள்ளை. என் தகப்பனார் சர்க்கார் உத்தியோகஸ்தர். அவர் இருந்த வரையில் பணக் கஷ்டம் என்றால் இன்னதென்று தெரியாதவனாயிருந்தேன். திடீரென்று ஒருநாள் அவர் இறந்துபோனபோது நானும் என் தாயாரும் தரித்திரத்தின் கொடுமையை உணரத் தொடங்கினோம். அப்போது நான் பட்டணத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தபடியால், என் தாயார், என் அம்மான் ஊரில் அவர் வீட்டிலேயே வசித்து வந்தாள். நல்ல வேளையாய் என் தகப்பனார் இன்ஷியூர் செய்திருந்தார். இன்ஷியூரன்ஸ் கம்பெனியார் கொடுத்த பணந்தான் என் படிப்புச் செலவுக்கு உதவிற்று. மற்றபடி எங்களுக்கு வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் ஒன்றுமேயில்லை. விடுமுறை நாட்களில் என் அம்மான் ஊருக்கு நான் போவதுண்டு. அந்தப் பட்டிக்காட்டில் யாருடனும் அதிகமாய்ப் பேசுவதற்கு எனக்குப் பிடிக்காது. சாயங்கால வேளைகளில் குளத்தங்கரை அல்லது ஆற்றங்கரையில் தனிமையான இடத்தைத் தேடிச் சென்று ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் வருங்காலத்தைப் பற்றி எனக்குச் சிந்தனையே கிடையாது. பி.ஏ. பாஸ் செய்து விட்டு ஏதேனும் உத்தியோகத்துக்குப் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தேன்.




ஒருநாள் வழக்கம் போல் சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு நான் குளக்கரைக்குச் சென்றேன். அங்கே புதிதாய்த் தளிர்விட்டு மாலைச் சூரிய கிரணங்களால் தகதகவென்று பொன்மயமாய்த் திகழ்ந்து கொண்டிருந்த அரச மரத்தடியில் உட்கார்ந்து, நான் சாவகாசமாய்ப் புத்தகம் படிப்பது வழக்கம். அன்றும் அந்த அரசமரத்தடிக்குச் சென்றேன். அங்கே உட்கார்ந்து படிக்கத் தொடங்கியதும் 'களுக்' என்ற சிரிப்பின் ஒலி கேட்டு, குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். குளத்தில் ஒரு விநோதமான காட்சி புலப்பட்டது. இளம் பெண் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தேகமெல்லாம் நீரில் மூழ்கி இருந்தது. முகம்மட்டும் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்த வண்ணம் வெளியில் தெரிந்தது. பெண்களின் முகங்களைத் தாமரை மலருக்கு ஒப்பிடுகிறார்களே, அதன் பொருத்தம் அப்போதுதான் எனக்கு நன்றாய்த் தெரியவந்தது.

அந்தப் பெண் ஒருவித விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து ஜலத்தை ஆகாயத்தை நோக்கிக் கொப்புளிப்பாள். அது திரும்பி வருவதற்குள் சடக்கென்று தண்ணீரில் முழுகிவிடுவாள். சில சமயம் கொப்புளித்த ஜலம் அவள் முழுகுவதற்குள் அவள் முகத்திலே விழுந்துவிடும். அப்படி விழும் போதெல்லாம் அவள் 'களுக்' என்று சிரிப்பாள்.



இந்த அசட்டு விளையாட்டு அப்போது என் மனத்தை ஏன் அவ்வளவு தூரம் கவர்ந்தது என்பதைச் சொல்ல முடியாது. குளத்தில் இறங்கி அம்மாதிரி நானும் விளையாட வேண்டுமென்று ஆசையுண்டாயிற்று. ஆனால் இதற்குள் அவ்வளவு தூரம் நான் புத்தி இழந்துவிடவில்லை. அந்தப் பெண் விளையாடும் காட்சியைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை தற்செயலாய் அவள் கரைப் பக்கம் திரும்பியபோது என்னைப் பார்த்து விட்டாள். நான் அவள் விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்ததையும் அவள் அறிந்திருக்க வேண்டும். வெட்கம் தாங்க முடியாமல் தண்ணீரில் முழுகியவள் வெகுநேரம் எழுந்திருக்கவேயில்லை. "இதென்ன? இந்தப் பெண்ணுக்கு மூச்சுப் போய்விடப் போகிறதே?" என்றுகூட எனக்குக் கவலையாய்ப் போயிற்று. அவள் வெளியே தலையை எடுத்ததும், இனிமேல் அங்கு நிற்பது உசிதமாயிராதென்று நினைத்து விரைந்து சென்றேன்.

இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணை வீதியிலும் குளக்கரையிலும் இரண்டு மூன்று தடவை சந்தித்தேன். என்னைப் பார்த்தபோதெல்லாம் அவள் வெட்கத்தினால் தலை குனிந்து கொள்வாள். அவள் முகத்தில் புன்சிரிப்பு உண்டாகும். உடனே யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயத்தினால் நாலு புறமும் மிரண்டு நோக்குவாள். ஐயோ! இந்தப் பெண் ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறாள்! நல்லவேளை நாம் சீக்கிரமாக இந்த ஊரைவிட்டுப் போகிறோம்" என்று எண்ணிக் கொண்டேன்.

காலேஜ் திறக்கும் நாள் சமீபித்துவிட்டபடியால் சீக்கிரத்தில் கிளம்பிச் சென்னைக்குச் சென்றேன். ஆனால் என்ன பிரயோசனம்? அவளுடைய முகமும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த முகம் - தண்ணீரில் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவ்வழகிய முகம் - என் மனக்கண்ணில் தோன்றும். மாலை வேளையில் கடற்கரைக்குச் சென்று நீலக்கடலைப் பார்த்தேனாயின், திடீரென்று அங்கே அலைகளுக்கு மத்தியில் அந்த முகம் மிதப்பது போல் பிரமையுண்டாகும். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும்போது ஆகாயத்தை நோக்கினால் அங்கேயும் அந்த முகந்தான் தோன்றும். பளிச்சென்று நிலவு வீசிக்கொண்டிருக்கும் இரவில் சந்திரனைத் தற்செயலாக நோக்கினால், நீலவானமே குளம் என்றும், சந்திரனே அவளுடைய வதனம் என்றும் பிரமை உண்டாகும். வீதியில் என்னைக் கண்டதும் வெட்கத்தினால் குனிந்து புன்சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருக்கும் அவள் முகமும் சில சமயம் இடையிடையே என் மனக்கண்முன் தோன்றும்.

எப்படியோ ஒரு வருஷம் சென்றது. அவ்வருஷ முடிவில் நான் பி.ஏ. பரீட்சை எழுதினேன். பின்னர் கிராமத்திற்குச் சென்றேன்.

கிராமத்தைச் சேர்ந்த அன்றைய சாயங்காலம் வழக்கம் போல் கையில் புத்தகத்துடன் குளத்தங்கரைக்குப் போனேன். ஆனால் என் மனம் என்னவோ, புத்தகத்தில் இல்லை. அந்தப் பெண்ணைச் சந்திப்போமா என்னும் எண்ணமே மேலோங்கியிருந்தது. அவ்வெண்ணத்திலே மகிழ்ச்சியும் வேதனையும் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன.

நான் குளத்தங்கரை சென்றபோது அவள் ஸ்நானம் செய்துவிட்டு இடுப்பில் குடத்துடன் கரையேறி வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தாள். ஆனால் இம்முறை அவள் தலைகுனியவுமில்லை; புன்சிரிப்புக் கொள்ளவுமில்லை. இரண்டாவது தடவை என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. விர்ரென்று போய்விட்டாள். ஆனால் அவளுடைய அந்த ஒரு பார்வையே என் இருதயத்தில் ஊடுருவிப் பாய்ந்து விட்டது. அதன் பொருள் முழுதும் நான் அப்போது அறிந்து கொள்ளவில்லையானாலும், அதில் நிந்தையும் கோபமும் நிறைந்திருந்தது மட்டும் என் உணர்வுக்குத் தெரிந்தது. சொல்ல முடியாத மனவேதனை கொண்டேன்.

அப்போதுதான் 'கலியாணம்' என்னும் யோசனை, முதல் முதலில் என் உள்ளத்தில் உதித்தது. ஆனால் என்ன பைத்தியக்காரத்தனம்! எனக்கு வீடு இல்லை, வாசலில்லை. சொத்து நிலம் ஒன்றும் கிடையாது. பரீட்சை பாஸ் ஆனால், ஏதாவது உத்தியோகம் தேடிச் சம்பாதித்துக் காலட்சேபம் நடத்தலாம். அதற்குள்ளாக இப்போது கலியாணம் எப்படிச் செய்து கொள்வது?

இவ்வாறு குழம்பிய உள்ளத்துடன் வீடு திரும்பினேன். அந்தப் பெண்ணைப் பற்றி - என்னுடைய மனோநிலையைக் காட்டிக் கொள்ளாமல் - மெதுவாக விசாரித்தேன். கிராமாந்தரத்தில் இத்தகைய விஷயங்கள் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாமல்லவா? அவள் பெயர் காந்திமதி என்றும், ஏழைப் பெண் என்றும், அவளுடைய தாயார் வாயு ரோகத்தினால் கஷ்டப்படுகிறவள் என்றும், எப்படியாவது தான் கண் மூடுவதற்குள் தன் பெண்ணுக்குக் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவள் பெரிதும் கவலைப்படுகிறாள் என்றும் தெரிந்து கொண்டேன்.

இவ்வளவு அழகும் புத்திசாலித்தனமும் வாய்ந்த பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கொள்ள நான் முந்தி, நீ முந்தி என்று போட்டியிட்டுக் கொண்டு வாலிபர்கள் முன் வரவில்லையென்னும் விஷயம் எனக்கு மிகவும் வியப்பளித்தது. இது நம்முடைய அதிர்ஷ்டத்தினால்தான் என்று எண்ணிக் கொண்டேன்.

ஆனாலும் இப்போது கலியாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்க எனக்கு மிகவும் வெட்கமாயிருந்தது. கலியாணம் செய்து கொண்டால் பெண்ணை உடனே அழைத்துப் போக வேண்டுமல்லவா? எங்கே அழைத்துப் போவது? இவ்வருஷம் பரீட்சையில் தேறாவிட்டால், இன்னும் ஒரு வருஷம் படிக்க வேண்டிவரும். அப்போது அவளை எங்கே விடுவது? என் தாயாரையே வைத்துக் காப்பாற்ற முடியாமல், மாமன் வீட்டில் விட்டு வைத்திருக்கும் நான், கலியாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றால் கேட்டவர்கள் எல்லாரும் சிரிக்க மாட்டார்களா?

என்னவெல்லாமோ யோசித்து, கடைசியில் உடனே பட்டணத்துக்குத் திரும்புவதென்றும், பரீட்சை தேறியிருந்தாலும் தேறியிராவிட்டாலும் ஏதாவது உத்தியோகத்துக்கு முயற்சி செய்வதென்றும், உத்தியோகம் கிடைத்ததும் ஊருக்குத் திரும்பி வந்து காந்திமதியைக் கலியாணம் செய்து கொள்வதென்றும் முடிவுக்கு வந்தேன். அவ்வாறே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

2

என்னுடைய தகப்பனாருடைய சிநேகிதர் ஒருவர் அப்போது சைதாப்பேட்டையில் டிபுடி கலெக்டராயிருந்தார். தம்முடைய ஆபீஸில் ஓர் ஆக்டிங் குமாஸ்தா வேலை காலியிருப்பதாகவும், இப்போதைக்கு அந்த வேலையில் என்னை நியமிப்பதாகவும், பிறகு சென்னை ஸெக்ரடேரியட் ஆபீஸில் உத்தியோகத்துக்குச் சிபாரிசு செய்வதாகவும் சொன்னார். சாதாரணமாய் உத்தியோகம் கிடைப்பதனால் ஏற்படக்கூடிய சந்தோஷத்தைக் காட்டிலும் எனக்குப் பத்து மடங்கு அதிக சந்தோஷம் உண்டாயிற்று. இதற்குள் பரீட்சையில் நான் முதல் வகுப்பில் தேறிய செய்தியும் கிடைத்தது. மறுபடியும் ஊருக்குத் திரும்பிப் போனேன்.

தாயாரிடம் மேற்கூரிய விவரங்களைச் சொல்லிவிட்டுக் காந்திமதியைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவள் 'ஐயோ பைத்தியக்காரா! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? அந்தப் பெண்ணின் தாயார் கூட 'உன் பிள்ளைக்குக் காந்திமதியைக் கலியாணம் செய்துகொள்கிறாயா?' என்று கேட்டாளே? நான் தானே 'இவனெல்லாம் இங்கிலீஷ் படித்துவிட்டானல்லவா? பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டான்' என்று சொல்லிவிட்டேன். இப்போது காரியம் மிஞ்சி விட்டதே. யாரோ பெரிய உத்தியோகஸ்தன் வந்து பெண்ணைக் கொண்டுபோய் விட்டானே! நகைகளாகச் செய்து இழைத்திருக்கிறான். காந்திமதியின் அதிர்ஷ்டத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறார்களே!" என்றாள்.

இதைக் கேட்டதும் என்னுடைய ஆகாசக் கோட்டை அப்படியே பொலபொலவென்று உதிர்ந்து விழுந்துவிட்டது. வாழ்க்கையிலேயே ருசியின்றிப் போயிற்று. இந்தச் சோக சாகரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டென்று நினைத்தேன். அது, ஏதாவது தீவிரமான வேலையில் மனத்தை ஈடுபடுத்துதல்தான். எனவே, சீக்கிரமாகவே சைதாப்பேட்டைக்குத் திரும்பிச் சென்று உத்தியோகத்தை ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு இரண்டு வருஷங்கள் சென்றன. ஸெக்ரடேரியட் ஆபீஸில் எனக்கு உத்தியோகமும் கிடைத்தது. இதற்குள் ஒருவாறு காந்திமதியை மறந்திருந்தேன். வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட யோசிக்கலானேன்.

ஸெக்ரடேரியட்டில் என்னுடைய ஸெக்ஷனுக்கு ஒரு தலைமை உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் பெயர் காமாட்சிநாதன். அவருக்குச் சுமார் 40 வயதிருக்கலாம். ஆரம்ப முதலே எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போயிற்று. பரம யோக்கியர். வேதாந்தத்தில் அதிகப் பற்றுள்ளவர். அவரைப் பார்த்தவுடன், "சம்சாரத்தில் தாமரை இலையில் தண்ணீர் போல் வாழவேண்டும்" என்பார்களே, அதற்கு உதாரண புருஷர் இவர்தான் என்று தோன்றும்.

எனக்கும் இளம் பிராயம் முதலே வேதாந்த விஷயங்களில் பற்று உண்டு; அடிக்கடி நாங்கள் பாரமார்த்திக தத்துவங்களைப் பற்றிப் பேசுவோம். ஒரு சமயம் அவர், "என் வீட்டில் அருமையான வேதாந்த புத்தகங்கள் பல வைத்திருக்கிறேன். நீ ஒரு நாள் வந்தால் பார்க்கலாம்" என்றார்.

அவ்வாறே அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன். நானும் அவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய மனைவி எங்களுக்குச் சிற்றுண்டி கொண்டு வந்தாள். அவளும் நானும் ஏக காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். என்னுடைய நெஞ்சு ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டது. உடம்பிலிருந்த ரோமங்களெல்லாம் குத்திட நின்றன. தேகமெல்லாம் வியர்வை துளித்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அன்றியும் கொண்டு வந்த தட்டுக்களை வைத்துவிட்டு விரைந்து உள்ளே சென்றாள். டம்ளர்களில் ஜலம் எடுத்துக்கொண்டு அவள் திரும்பி வருவதற்கு ஐந்து நிமிஷம் பிடித்தது.

அதற்குள் என் மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்திக் கொண்டேன். மறுபடி அவள் வந்ததும், "இவள்தான் என் மனைவி" என்று காமாட்சிநாதன் தெரிவித்து என்னையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவள் விஷயத்தில் இவருக்கு ரொம்பவும் பெருமை என்பது நன்றாக வெளியாயிற்று.

எனக்கு அவர் மனைவியை முன்னமேயே தெரியும் என்று நான் சொல்லவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? உண்மையிலேயே நாங்கள் பேசிப் பழகியிருந்தோமானால் சொல்லலாம். "குளக்கரையிலும், வீதியிலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்கிறோம்; கண்களினால் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று சொல்லமுடியுமா? ஆகையாலேயே அதைப்பற்றி நான் பிரஸ்தாபிக்கவில்லை. ஒருவேளை அப்போதே அதைச் சொல்லியிருந்தால், பின்னால் அவ்வளவு துன்பங்களுக்காளாகியிருக்க வேண்டாமோ, என்னவோ?

'உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?'

என்ற கவியின் வாக்கு என் விஷயத்தில் உண்மையாயிற்று.

அதன் பிறகு அவருடைய வீட்டுக்கு நான் அடிக்கடி போகத் தொடங்கினேன். என் மனத்திலோ ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. "அவர் வீட்டுக்குப் போகாதே; போவதனால் கஷ்டந்தான் ஏற்படும்" என்று ஒரு புத்தி சொல்லிற்று. ஆனால் அதை மீறிக்கொண்டு, "அங்கே போகவேண்டும்; போக வேண்டும்" என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கி எழுந்து கொண்டிருந்தது.

"போகவேண்டாம்" என்ற கட்சி நாளடைவில் மங்கி மறைந்தது. அடிக்கடி போகத் தொடங்கினேன். அதனால் காமாட்சிநாதனும் அதிக சந்தோஷமடைந்ததாகத் தெரிந்தது. முதன்முதலில் நானும் அவர் மனைவியும் சந்தித்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட மனக்கலக்கத்தை அவர் கவனித்தாரா என்றாவது, பின்னால் என்னை அவர் வீட்டுக்கு அடிக்கடி கவர்ந்திழுத்த காரணம் இன்னதென்று அவர் ஊகித்தாரா என்றாவது இன்றுவரை நான் அறியேன். இதெல்லாம் தெரிந்தவராக அவர் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனபோது, இவர் வெளியில் போயிருந்தார். "உட்காருங்கள், வந்துவிடுவார்" என்று காந்திமதி சொன்னாள். சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தோம். ஏதாவது பேசாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றிற்று. "என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி இந்த உலகத்திலே கிடையாது" என்றேன். நான் யோசித்துப் பேசினேன் என்று சொல்ல முடியாது. அந்த வார்த்தைகள் தாமே வெளிவந்தன என்றே சொல்லலாம்.

"நீங்கள் இங்கே வரவேண்டாமென்று சொல்வதற்கிருந்தேன். பாழும் மனம் கேட்கமாட்டேனென்கிறது" என்றாள் காந்திமதி.

அப்போது எனக்கு மயிர் சிலிர்த்தது. உடம்பு முழுதும் படபடவென்று அடித்துக் கொண்டது.

( தொடரும்) 

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி 


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: