வெள்ளி, 21 செப்டம்பர், 2018

1156. காந்தி - 44

38. நெருப்பைக் கொட்டினார்கள்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த  38-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

சௌரி சௌரா பயங்கரச் சம்பவத்துக்காக மகாத்மா பிப்ரவரி 12 - ஆம் தேதி உபவாசம் ஆரம்பித்து ஐந்து நாள் விரதம் இருந்தார். 17 - ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் உண்ணாவிரத பூர்த்தி பாரணைக்காகக் கொஞ்சம் பாலும் சில திராட்சைப் பழங்களும் ஆரஞ்சு ரஸமும் கொண்டு வந்தார். காந்திஜி ஸ்ரீமத் ராமதாஸ் என்னும் இன்னொரு சீடரை அழைத்துப் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கவனமாகச் சிரவணம் செய்தார். அச்சமயம் பாபு ராஜேந்திர பிரஸாத், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஸ்ரீமதி அனசூயாபென் முதலியவர்கள் மகாத்மாவின் அருகில் இருந்தார்கள். மகாத்மாவின் கண்ணில் என்றுமில்லாத வண்ணம் சில கண்ணீர்த் துளிகள் துளிர்த்து வழிவதை அவர்கள் பார்த்து மனம் உருகினார்கள். சௌரி – சௌரா காந்திஜியின் மனதை எவ்வளவு புண்படுத்தி யிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆம்; அதில் வியப்பு என்ன? எந்த இயக்கத்தினால் இந்தியாவக்குக் கதிமோட்சத்தை அளிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு மகாத்மாகாந்தி அல்லும் பகலும் அனவரதமும் வேலை செய்து வந்தாரோ, அந்த இயக்கத்தை இப்போது ஆரம்பிக்க முடியாமற் போய்விட்டதல்லவா?

இதனால் மகாத்மாவின் மனம் எவ்வளவு தூரம் புண்ணாகி யிருக்கவேண்டும் என்று அறியாது அரசியல் வாதிகளும் தேசபக்தர்களும் அவருடைய தலைமீது நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் காந்திஜி பொறுமையாகச் சகித்துக்கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமான ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. மகாத்மா உபவாசம் நிறுத்திய மறுநாள் அதாவது பிப்ரவரி 18௳ மௌலானா முகமதலியையும் டாக்டர் கிச்லூவையும் பீஜப்பூர் சிறையிலிருந்து தூலியா சிறைக்குக் கொண்டு போனார்கள். அந்த ரயில் பாதையின் மத்தியில் பர்தோலி ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. இதை அறிந்த மகாத்மா ரயில்வே நிலையத்தில் அவர்களைப் பார்த்து விட்டு வரும்படி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரை அனுப்பினார். ஸ்ரீ கிருஷ்ண தாஸ் சில ஆரஞ்சுப் பழங்களையும் எடுத்துக்கொண்டு பர்தோலி ரயில் நிலையத்துக்குப் போனார். மௌலானாவைச் சந்தித்துக் காந்திஜி முதல் நாள்தான் உபவாச விரதத்தை முடித்திருந்தபடியால் அவர்களைப் பார்க்க வரவில்லை யென்று கூறினார்.

ஆனால் மௌலானாவுக்கு இது சமாதானம் அளிக்கவில்லை. மகாத்மாவை ரயில் நிலையத்தில் சந்திக்க அவர் எவ்வளவோ ஆவலாயிருந்தார். மகாத்மா வரவில்லை யென்று அறிந்ததும் மௌலானா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. பர்தோலியை விட்டுப் புறப்படுவதற்குள் எப்படியாவது மகாத்மாவைப் பார்க்க விரும்புவதாக ஸ்ரீகிருஷ்ணதாஸிடம் மௌலானா கூறினார். ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஓடோடியும் சென்று காந்திஜியினிடம் மௌலானாவின் விருப்பத்தைத் தெரிவித்தார். மகாத்மா தம்முடைய பலவீனத்தை மறந்து உடனே புறப்பட்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். மகாத்மாவைக் கண்டதும் மௌலானா முகம்மதலியும் டாக்டர் கிச்லூவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்திஜி அருகில் வந்ததும் அவரை அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் உகுத்தார்கள். தாங்கள் சிறையாளிகள் என்பதையும் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதையும் ஒரு நிமிஷம் மறந்தே விட்டார்கள். ஆரம்ப உணர்ச்சிப் பெருக்குக் கொஞ்சம் குறைந்ததும் மௌலானா "பாபுஜி! 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளக் கூடியவர் வேறு யார்? சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று திரும்பத் திரும்ப மௌலானா கோஷித்துக்கொண்டே போனார். தலைவரிடம் இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் கண்டவர்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் தளும்பியது.

இந்த நிகழ்ச்சியினால் மகாத்மாவுக்கு ஓரளவு மனச்சாந்தி ஏற்பட்டது. ஆனால் இவ்வாறு மகாத்மா கைக்கொண்ட முறையே சரியானது என்று கருதியவர்கள் மிகச் சிலர் தான். மற்றவர்கள் அதை ஒபபுக்கொள்ளவில்லை. மகாத்மா காந்தி செய்தது பெரிய தவறு என்றும், காரியசித்தி அடையும் சமயத்தில் மகாத்மா தேசத்தைப் பின்னுக்கு இழுத்து விட்டார் என்றும் சொன்னார்கள். மகாத்மாவுக்கு இந்தியாவின சுதந்திரத்தைக் காட்டிலும் அஹிம்சா தர்மப்பிரசாரமே பெரிது என்றார்கள். தேசமெங்கும் பரிபூரண அஹிம்சை நிலவும் வரையில் காத் திருப்பது என்றால், இந்த யுகத்தில் இந்தியா சுதந்திரம் அடையப் போவதில்லை என்று சொன்னார்கள்.

இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர தேசத்துப் பத்திரிகைகளிலே அதிகமாக வெளியாயின. டில்லியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் பூரண நம்பிக்கைக்கு உகந்த சகாக்களும் அவரைப் பலமாகத் தாக்கினார்கள்.

பர்தோலி வரிகொடா இயக்கத்தையும் இந்தியா முழுவதிலும் தனிச் சட்ட மறுப்பையும் கூட நிறுத்தி வைத்து நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவது என்று காரியக் கமிட்டியில் தீர்மானம் செய்யப்பட்டது அல்லவா? அதை ஊர்ஜிதம் செய்வதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி டில்லியில் பிப்பரவரி 24-ஆம் தேதி கூடியது. அதற்காக 22-ஆம் தேதியன்று மகாத்மா காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் பர்தோலி மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.

"பொதுஜனச் சட்ட மறுப்பை இப்போது ஆரம்பிக்க முடியாமல் நீடித்துத் தள்ளிப்போட நேர்ந்ததற்கு நீங்கள் பொறுப்பாளிகள் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் நன்கு நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் இந்தியா ஒரு தேசம். எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நேர்ந்தால் அது தேசம் முழுவதையும் பாதிக்கிறது. ஆகையினாலேயே சௌரி-சௌரா நிகழ்ச்சி காரணமாக பர்தோலி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்காக நீங்கள் மனச் சோர்வு அடையக்கூடாது.

பலாத்கார யுத்தத்தில் தலைவன் படைகளை 'முன்னேறுங்கள்' என்றால் முன்னேற வேண்டும். 'பின்வாங்குங்கள்' என்றால் பின்வாங்கியே தீர வேண்டும். இது அஹிம்சைப் போருக்கும் பொருந்தும். ஆகையால் கொடுக்கவேண்டிய வரிகளையெல்லாம் காலாகாலத்தில் கொடுத்துவிடுங்கள். எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள். நிர்மாணத் திட்டத்தில் முழு உற்சாகம் காட்டி வேலை செய்யுங்கள். நிர்மாண வேலையின் மூலமாகச் சுதந்திரத்தின் சாராம்சத்தை நாம் அடைந்தவர்களாவோம்!*


பர்தோலி வாசிகளுக்கு எவ்வளவோ ஏமாற்றமும் மனத்தாங்கலும் இருந்த போதிலும் அவர்கள் மகாத்மாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். பர்தோலி வாசிகளைப்போல் இந்தியா முழுவதும் காந்தி மகாத்மாவின் போதனைக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக மகாத்மாஜி டில்லிக்குப் பிப்ரவரி 23-ஆம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவருக்குப் பல கடிதங்கள் காத்திருந்தன. சிறைக்குள்ளேயிருந்து பல நண்பர்களும் சகாக்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். டில்லி, லக்நௌ, ஆக்ரா முதலிய ஊர்களின் சிறைகளிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவையெல்லாம் பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்துக் கண்டிப்பதாகவே இருந்தன. அந்தச் சமயத்தில், அவ்வளவு தூரம் சர்க்காரை அறை கூவி அழைத்த பிறகு பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவதை யாரும் ஆதரிக்கவில்லை. அ.இ.கா. கமிட்டி கூட்டத்துக்கு நேரில் ஆஜரானவர்களும் அவ்விதமே மகாத்மாவுடன் மாறுபட்டார்கள். சுவாமி சிரத்தானந்தர், "இந்தியா முழுவதும் அமைதியை எதிர்பார்ப்பது என்பது நடவாத காரியம்; ஆகையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டு வேறு முறைகளைப் பார்க்க வேண்டியதுதான்!" என்றார். வங்காளத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிக்க அதிருப்தி தெரிவித்தார்கள். மகாத்மா நிர்மாணத் திட்டத்தை அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக அவர்கள் சொல்லி, "மிட்னாபூரில் ஜனங்கள் கதர் கட்டிக் கொள்ளாமலே சர்க்காருடன் போர் நடத்தி யூனியன் வரியை ரத்து செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்." என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார்கள். இதனாலெல்லாம் மகாத்மா முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கூடத் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை யென்ற நம்பிக்கையை அடைந்தார். ஆகையால் பர்தோலி சட்டமறுப்பை நிறுத்தி வைத்தது ரொம்பவும் சரியான காரியம் என்ற முடிவுக்கு வந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஹக்கீம் அஜ்மல்கானின் அக்கிராசனத்தின் கீழ் கூடியது. மகாத்மா முதலிலேயே தம்முடைய கருத்தை வெளியிட்விட்டார். "பரிபூரண அஹிம்சையில்லாமல் என்னால் இயக்கத்தை நடத்த முடியாது. உங்களுடைய கருத்து மாறுபட்டிருந்தால் நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்றார். இதை அநேகர் விரும்பவில்லை. மகாத்மாவின் தலைமை இல்லாமல் இந்தியாவின் விடுதலை கை கூடாது, எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று அவர்கள் கருதினார்கள். பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்த சுவாமி சிரத்தானந்தரே இந்தக் கூட்டத்தில் "மகாத்மாஜி! நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும்? தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை!" என்றார். ஆனால் காந்திஜியின் தலைமையை இழப்பதற்கம் ஒரு சிலர் தயாராயிருந்தார்கள். மகாராஷடிரத்தைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேயும் கல்கத்தாவிலிருந்து வந்த ஸ்ரீ ஜே. என். சென்குப்தாவும் மகாத்மாவின் பேரில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

ஒரு கமிட்டி நியமித்து, ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு, தேசத்துக்கு நேர்ந்த தீமைகளையெல்லாம் விசாரிக்கச் சொல்லவேண்டும் என்று டாக்டர் மூஞ்சே பிரேரணை செய்தார். ஸ்ரீ அப்யங்கர், மௌலானா ஹஸரத் மோகினி முதலியவர்கள் தீவிரமாக டாக்டர் மூஞ்சேயை ஆதரித்தார்கள். வேறு சிலர் மகாத்மாவை ஆதரித்துப் பேசலானார்கள். வாதப் பிரதி வாதங்கள் முற்றி மனக் கசப்பு வளரும் போலிருந்தது.

இச்சமயத்தில் ஹக்கீம் அஜ்மல்கான் உடம்பு சரியாயில்லையென்று சொல்லி எழுந்து போனார். மகாத்மாவையே தமக்குப் பதிலாகச் சபையை நடத்தும்படி ஏற்படுத்திவிட்டுப் போனார். மகாத்மா தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் நிலைமையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஏனெனில், தம்மைத் தாங்கிப் பேச விரும்பிய யாரையம் மகாத்மா பேசவதற்கு அனுமதிக்கவில்லை. தம்மீது குற்றங் கூற விரும்பியவர்கள் தங்களுடைய மனதைத்திறந்து சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல அநுமதித்தார். இதனால் சபையில் ஒர பெரிய மாறுதல் ஏற்பட்டது. குற்றங் கூறியவர்களுக்கும் கொஞ்ச நேரத்தக் கெல்லாம் அலுத்துப் போய்விட்டது. டாக்டர் மூஞ்சே தங்கள் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மகாத்மாஜி தமது கட்சியை எடுத்துச் சொல்லவேண்டும் என்றம் கேட்டுக்கொண்டார். மகாத்மாஜி அதற்க இணங்க வில்லை. "நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. சபையோர் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை யொட்டித் தீர்மானிக்கட்டும். என்னுடைய திட்டம் பிடிக்காவிட்டால் நான் விலகிக் கொள்ளத் தயார்" என்ற மட்டும் சொன்னார். வோட்டுக்கு விடப்பட்ட போது டாக்டர் மூஞ்சேயின் தீர்மானமும் ஸ்ரீ ஜே. எம். சென்குப்தாவின் தீர்மானமம் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தன. பர்தோலி தீர்மானம் மகாத்மாவே ஒப்புக்கொண்ட சிற்சில மாறுதல்களுடன் நிறைவேறியத. இதன் பிரகாரம் பொதஜனச் சட்டமறுப்பு யோசனை இப்போதைக்குக் கைவிடப்பட்டது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தனிப்பட்ட சட்டமறுப்புத் தொடங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது; அதற்குரிய நிர்மாணத் திட்ட நிபந்தனைகள் முன்னைவிடக் கடுமையாயின.

டில்லியிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதிக்குத் திரும்பி வந்தார். இனி கதர் உற்பத்தி, தேசீயக் கல்வி, தீண்டாமை விலக்கு, ஹிந்து மஸ்லிம் ஒற்றுமை ஆகிய நிர்மாணத் திட்டங்களில் தம்முடைய பூரண கவனத்தையும் செலுத்தத் தீர்மானித்து மகாத்மா அந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மகாத்மாஜி பிறருடைய பாவங்களக்கு உண்ணாவிரத பிராயச்சித்தம் செய்து, அஹிம்சா தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பொதுஜனச் சட்ட மறுப்பையும் நிறுத்தி வைத்த பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்த முன்வந்தனர். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் இந்த இழிதகைமையான செயலைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: