சனி, 1 செப்டம்பர், 2018

1148. காந்தி - 42

36. வைஸ்ராய்க்கு இறுதிக் கடிதம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2ஆம் பாகம்) என்ற நூலில்  வந்த  36-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
பம்பாயில் மகாநாடு கூட்டிய தலைவர்கள் அந்த மகாநாட்டின் தீர்மானத்தை வைஸ்ராய் ரெடிங் ஏற்றுக்கொள்ளுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆகையால் வைஸ்ராயிடமிருந்து பதில் வருவதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று மகாத்மா காந்தியைக் கேட்டுக் கொண்டார்கள். மகாத்மாவும் அதற்குச் சம்மதித்தார். ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரையில் காத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆகவே பம்பாயிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கே அம்மாதம் 28-ஆம் தேதி வரையில் காத்திருந்தார்.

ஆனால் வைஸ்ராய் ரெடிங் சாதகமான பதில் அனுப்புவார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்குக் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜி ஏற்பாடு எதுவும் நடப்பதை மகாத்மா விரும்பவும் இல்லை. அப்படி ராஜி ஏற்படுமானால் அதை வகிப்பதற்குத் தேசம் தகுதி பெறவில்லை என்று மகாத்மா கருதினார். (இன்றைக்குக்கூட நம்மில் பலர் தேசம் பூரண தகுதி பெறுவதற்குச் சிறிது முன்னாலேயே சுயராஜ்யம் வந்துவிட்டது' என்று கருதுகிறோம் அல்லவா?)

மகாத்மாவின் உள்ளம் அக்காலத்தில் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதை "நவஜீவன்" பத்திரிகைக்கு அவர் அப்போது எழுதிய ஒரு கட்டுரையினின்றும் அறியலாம். அக்கட்டுரையில் மகாத்மா எழுதியதாவது:-

ராஜி வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால் நான் உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். ராஜி ஏற்பட்டுவிட்டால், அதன் பலனாக என்ன நேரிடுமோ? ராஜி ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவவிட மாட்டேன். ஆயினும் இந்தியாவின் பலம் இவ்வளவுதான் என்பதை நான் அறிந்திருப்பதால், ராஜியை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நாம் சரியானபடி சோதனைக்கு உள்ளாகி அதில் தேறி வெளி வந்தாலன்றி, ராஜியினால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.

தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து குழந்தை பிறக்க வேண்டும். முன்னாலேயே பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து போய்விடும். போர்ச்சுகல் தேசத்தில் மின்னல் புரட்சி நடந்து ஒரு நொடியில் அரசாங்கம் மாறிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அங்கே அரசாங்கம் அடிக்கடி மாறிக்கொண்டே யிருக்கிறது. நிலையான அரசியல் அமைப்பு இன்னமும் ஏற்பட்ட பாடில்லை. 1909-ஆம் வருஷத்தில் துருக்கியில் திடீர்ப் புரட்சி நடந்து அரசாங்கம் மாறியது. அது குறித்து உலகமெல்லாம் துருக்கிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பின. ஆனால் அது ஒன்பதுநாள் விந்தையாக முடிந்து மாயக்கனவைப்போல் மறைந்து விட்டது. அதற்குப் பிறகு துருக்கி எவ்வளவோ அனுபவங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. அந்தத் தேசம் இன்னும் என்னென்ன அநுபவிக்க வேண்டுமோ, யார் கண்டது? இதையெல்லாம் நினைக்கும் போதுதான் இந்தியாவில் நாம் தயாராவதற்கு முன்னால் ராஜி ஏற்பட்டு விடப் போகிறதே என்று பயப்பட வேண்டி யிருக்கிறது."

இவ்விதம் "நவஜீவன்" பத்திரிகையில் மகாத்மா எழுதினார். இந்திய மக்கள் இன்னும் சுதந்திரத்துக்குத் தகுதி பெறவில்லை. சுயராஜ்யம் ஆளுவதற்கு வேண்டிய வலிமையும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் பெறவில்லை என்ற எண்ணம் மகாத்மாவுக்கு இருந்தது. லார்ட்ரெடிங்கும் வேறொரு விதத்தில் இதே எண்ணம் கொண்டவராயிருந்தார். ஆகையால் அவர் பம்பாய் மகாநாட்டின் தீர்மானத்துக்கு இணங்கி வரவில்லை. பம்பாய் மகாநாட்டை நடத்தியவர்களுக்கு ஜனவரி 30-ல் லார்ட் ரெடிங்கினிடமிருந்து பதில் வந்தது. அந்தப் பதில் "இல்லை" என்பது தான். அதாவது வட்ட மேஜை மகாநாடு கூட்ட முடியாது என்பதுதான். அது விஷயமாக வைஸ்ராயைச் சந்தித்துப் பேச அநுமதி வேண்டுமென்று மிதவாதத் தலைவர்கள் கோரியிருந்தார்கள். அந்தக் கோரிக்கையைக்கூட வைஸ்ராய் ரெடிங் மறுதளித்துவிட்டார்.

ஜனவரி 27-ஆம் நாள் மகாத்மா பர்தோலி போய்ச் சேர்ந்திருந்தார். 31-ஆம் நாள் சூரத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. அதற்குள் வைஸ்ராயின் பதிலும் தெரிந்து போய்விட்டது. ஆகவே பர்தோலியில் பொதுஜன சட்டமறுப்பு ஆரம்பிப்பதற்கு மகாத்மாவுக்குக் காரிய கமிட்டி அதிகாரம் கொடுத்தது.

மறுநாள் அதாவது 1922-ஆம் வருஷம் பிப்ரவரி மீ 1 தேச சரித்திரத்தில் பிரசித்திபெற்ற இறுதிக் கடிதத்தை மகாத்மாகாந்தி வைஸ்ராய்க்கு எழுதினார். அந்த முக்கியமான கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:-
மேன்மை தங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு

ஐயா ,

பம்பாய் மாகாணத்தில் சூரத் ஜில்லாவில் பர்தோலி ஒரு சிறு தாலுகா. அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 87,000 தான். பிப்ரவரி 29 பர்தோலி தாலுகா வாசிகள் ஸ்ரீவித்தல் பாய் படேல் அவர்களின் தலைமையில் மகாநாடு கூடினார்கள். சென்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தின் பேரில் நிபந்தனைகளை நிறைவேற்றித் தகுதி பெற்று விட்டபடியால் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். இந்தத் தீர்மானத்துக்கு நானே பெரிதும் பொறுப்பாளியானபடியால், எதற்காக பர்தோலி வாசிகள் இத்தகைய தீர்மானத்தைச் செய்தார்கள் என்பதைத் தங்களுக்கும் பொது மக்களுக்கும் விளக்கிக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிலாபத், பஞ்சாப், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று பிரசனைகள் விஷ்யமாகவும் இந்தியாவின் கோரிக்கையை இந்திய சர்க்கார் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மறுப்பு சர்க்காரின் பெருங் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றவாளி சர்க்காரை எதிர்த்துப் புரட்சி செய்ய இந்தியா தேசம் தீர்மானித்திருக்கிறது. அந்தத் தீர்மானத்துக்கு ஒரு அறிகுறியாகவே மேற்படி அ.இ.கா. கமிட்டி நிபந்தனைகளுக்குட்பட்டு முதன் முதலில் பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, பம்பாயில் சென்ற நவம்பர் 17 கலவரங்கள் நிகழ்ந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தின. அதன் காரணமாக பர்தோலி சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்திப்போட நேர்ந்தது. இதற்கிடையில் தேசமெங்கும் இந்திய சர்க்காரின் உடந்தையின் பேரில் கொடுமையான அடக்குமுறை நடந்திருக்கிறது. வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஐக்கிய மாகாணத்திலும், பஞ்சாப்பிலும், டில்லியிலும் அத்தகைய அடக்குமுறை அமுல் நடந்திருக்கிறது. அதிகாரிகளின் மேற்படி நடவடிக்கைகளை 'அடக்குமுறை' என்று சொல்வதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அவசியத்துக்கு அதிகமான நடவடிக்கைகள் எல்லாம் 'அடக்குமுறை' தான் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்துக்களைச் சூறையாடுதல், குற்றமற்ற ஜனங்களைத் தாக்குதல், சிறையில் கைதிகளுக்குக் கசையடி முதலிய குரூர தண்டனைகள் – இவையெல்லாம் சட்டத்துக்குட்பட்ட நாகரிக நடவடிக்கைகள் ஆகமாட்டா. ஹர்த்தால் விஷயத்தில் சில இடங்களில் ஒத்துழையாதார் பயமுறுத்தலைக் கையாண்டிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதற்காக அதிகாரிகள் கையாண்ட கொடிய முறைகளை எந்தவிதத்திலும் நியாயம் என்று சொல்லமுடியாது. பலாத்கார நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களை, சாத்வீக தொண்டர் படைகளைக் கலைக்கவும் பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கவும் சர்க்கார் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் அடக்குமுறை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

ஆகவே இப்போது தேசத்தின் முன்னால் உள்ள அவசரப்பிரச்னை பேச்சு சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் - கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்டுவதுதான். தற்போதைய நிலையில் பம்பாயில் கூடிய மாளவியா மகாநாட்டில் எவ்விதத்திலும் கலந்துகொள்ள ஒத்துழையாதார் விரும்பவில்லை. ஆயினும் தேச மக்களுக்கு வீண் துன்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த மகாநாட்டின் முடிவுகளை ஒப்புக் கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நான் யோசனை கூறினேன்.

ஆனால் தாங்கள் அந்த மகாநாட்டின் முடிவுகளை அடியோடு நிராகரித்து விட்டீர்கள். இத்தனைக்கும் தங்களுடைய கல்கத்தா பிரசங்கத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை யொட்டியே அம் முடிவுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆகவே மக்களின் மூலாதார உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு தேசம் சாத்வீக சட்ட மறுப்பு முறையை ஏதேனும் ஒரு விதத்தில் கையாளும்படி ஏற்பட்டு விட்டது. வேறு வழி ஒன்றுக்கும் இடமில்லாமல் தாங்கள் செய்துவிட்டீர்கள். அலி சகோதரர்கள் தங்கள் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்த காலத்தில் இந்திய சர்க்கார் ஒரு வாக்குறுதி அளித்தனர். அதாவது ஒத்துழையாதார் பலாத்காரத்தில் இறங்காத வரையில் அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை யென்று கூறினார்கள். அந்த வாக்குறுதி காற்றிலே போய்விட்டது. அதைச் சர்க்கார் கடைபிடித்திருந்தால் பொதுஜன சட்ட மறுப்பை இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போட்டிருக்கலாம். அதற்குத் தாங்கள் இடம் வைக்கவில்லை. சட்டமில்லா அடக்குமுறைச் சட்டங்களைச் சர்கார் கையாளுவதினால் பொது ஜனச் சட்ட மறுப்பை உடனே ஆரம்பிப்பது அவசியமாகிவிட் டது. நான் பொறுக்கி எடுக்கும் பிரதேசங்களில் மட்டும் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி அநுமதி கொடுத்திருக்கிறது. நான் இப்போதைக்குப் பர்தோலியைத் தேர்ந்தெடுக்கிறேன். தவிர, குண்டூர் ஜில்லாவில் சுமார் நூறு கிராமங்கள் கொண்ட பிரதேசத்துக்கும் சட்ட மறுப்பைத் தொடங்குவதற்கு நான் ஒருவேளை அநுமதி கொடுக்ககூடும்.

ஆனால் பொதுஜனச் சட்டமறுப்பு உண்மையில் ஆரம்பமாவதற்கு முன்பு கடைசி முறையாகத் தங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்திய அரசாங்கத்தின் தலைவராகிய தாங்கள் அரசாங்கத்தின் முறையை மாற்றிக் கொள்ள இணங்குங்கள். பலாத்காரமற்ற நடவடிக்கைகளுக்காகச் சிறைப்பட்டிருக்கும் கைதிகளை யெல்லாம் விடுதலை செய்யுங்கள். அத்தகைய பலாத்காரமற்ற நடவடிக்கைகளைத் தடை செய்வதில்லை யென்று உறுதி சொல்லுங்கள். பத்திரிக்கைகளுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றுங்கள். அபராதங்களையும் சொத்துப் பரிமுதல்களையும் திருப்பி அவரவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்படி தங்களைக்கேட்கும்போது உலகத்தில் நாகரீகமடைந்த தேசங்களின் அரசாங்கங்கள் செய்வதைத்தான் தாங்களும் செய்யும்படி நான் கோருகிறேன்.

இந்தக் கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் மேற்கண்டவாறு தாங்கள் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடும்படி நான் யோசனை சொல்லுவேன். சிறைப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுதலையாகித் தேசத்தின் புதுநிலைமையைப் பற்றி யோசித்து முடிவு செய்யும்படி கூறுவேன். அரசாங்கத்தார் மேற்கண்டவாறு அறிக்கை பிறப்பித்தால், பொதுஜன அபிப்பிராயத்தை அங்கீகரிக்க அரசாங்கத்தார் உண்மையான விருப்பமுள்ளவர்கள் என்பதற்கு அது அறிகுறியாயிருக்கும் ஆகவே பொதுஜனச் சட்டமறுப்பைத் தள்ளி வைத்துப் பொதுஜன அபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தும் வேலைகளிலே மேலும் ஈடுபடும்படி தேசத்துக்கு நான் யோசனை சொல்வேன்.
இங்ஙனம்
தங்கள் உண்மை ஊழியனும் நண்பனுமான பர்தோலி, 1-2-1922 எம்.கே.காந்தி

இந்த இறுதிக்கடிதம் பிப்ரவரி 4-ஆம் தேதி தேசமெங்கும் பிரசுரமாயிற்று. பொதுஜனங்களிடையில் மின்சார சக்தி பரவியதைப் போன்ற உற்சாகம் உண்டாயிற்று. மிதவாதத் தலைவர்களோ "வைஸ்ராய்க்கு இப்படியும் கடிதம் எழுதலாமா?" என்று தேள்கொட்டியவர்களைப்போல் துடித்தனர். வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதும்போது 'May it please Your Lordship' என்று ஆரம்பிப்பது வழக்கம். வெறும் சம்பிரதாய மரியாதைகளை அனுசரிக்க அது காலமில்லையென்று கருதி மகாத்மா, "ஸார்!" என்று கடிதத்தை ஆரம்பித்திருந்தார். இதையும் சில மிதவாதப் பிரமுகர்கள் கண்டித்தார்கள். இன்னும் கொஞ்ச காலம் மகாத்மா அவகாசம் கொடுத்திருந்தால் லார்ட் ரெடிங்கைச் சரிக்கட்டி வட்டமேஜை மகாநாடு கூட்டும்படி செய்திருக்கலாம் என்றும் மிதவாதப் பிரமுகர்கள் வெகுகாலம் சொல்லி வந்தார்கள்.

பிப்ரவரி 4-ஆம் தேதி பிரசுரமான மகாத்மாஜியின் கடிதத்துக்குப் பதிலாக இந்திய சர்க்கார் பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார்கள். அதிகார வர்க்கத்தினர் குதர்க்க சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்கள் என்பது தெரிந்த விஷயந்தானே? ஆகையால் குற்றங்களை யெல்லாம் காங்கிரஸின் மீது சுமத்தும் முறையில் மேற்படி அறிக்கையில் வாதமிட்டிருந்தார்கள். மகாத்மாவின் கோரிக்கைகள் எவ்வளவு அநியாயமானவை என்று நிரூபிப்பதற்குப் பிரயத்தனம் செய்திருந்தார்கள். அத்தகைய அநியாயமான கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியாதென்றும், அவற்றைக் குறித்து விவாதிக்கவும் முடியாதென்றும் சொல்லிவிட்டு அவற்றைக் குறித்து தேசத்தில் அபாயகரமான குழப்பம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்குப் பொதுமக்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையை முடித்திருந்தார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: