வியாழன், 25 ஆகஸ்ட், 2022

2219. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 3

உ.வே.சாமிநாதையருடன் தணிகைமணி

சி.இலட்சுமணன்


ஆகஸ்ட் 25. செங்கல்வராய பிள்ளையின் நினைவு தினம்.

====

1910ஆம் ஆண்டு பிள்ளை அவர்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருநாள் சிதம்பரத்திற்குச் சென்று “அருணகிரி நாதர் வரலாறு” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர்தம் பேச்சைக் கேட்ட டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் இவரைப் பாராட்டிப் பேசிய நிகழ்வு குறிப்பிடத் தக்கதாகும்.

ஒருநாள் உ.வே.சா. பிள்ளை அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். இந்நிகழ்வை, நமது வீடு புண்ணியம் பண்ணிற்று என்றும் “தமிழ்த் தொண்டுக்காக ரூபாய் 50 அவருக்குக் கொடுத்தோம்" என்றும் தமது நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளமை இவண் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வோர் ஆண்டும் பிள்ளை அவர்கள் உ.வே.சா. ஐயரைப் பார்த்துப் பேசி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1942ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐயர் அவர்களது இல்லத்திற்கு இவர் சென்றார். அங்குத் தமிழ்த்தாத்தா என்று அன்போடு அனைவராலும் கூறப்படும் உ.வே.சா. நோயுற்று படுக்கையில் இருந்தார். பிள்ளையவர்கள் அவர் அருகில் சென்று நின்றார். ஐயர் அவர்கள் மகிழ்ச்சியோடு திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே என்று பிள்ளையவர்களின் இருகைகளையும் தம் கண்களில் ஒத்திக் கொண்டார்.

உடனே உள்ள நெகிழ்ச்சியோடு கண்களில் நீர்மல்க ஐயரவர்களின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சங்கத் தமிழ் நூல்களைத் தேடி அலைந்த கால்களாயிற்றே என்று கூறி பிள்ளை அவர்களை வணங்கி நின்றார். தமிழ்மேல் பிள்ளையவர்கள் கொண்ட பேரன்பிற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

[ நன்றி: "தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை" , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை: