வியாழன், 28 செப்டம்பர், 2017

855. குழந்தையும், கவிதையும் : கவிதை

குழந்தையும்,  கவிதையும்
பசுபதி
[ பாலகணபதி :  ஓவியம்: பத்மவாசன் ] 

அக்டோபர் 2015 ’அமுதசுரபி’யில் ஒரு கேள்வி : 

 கேள்விகுழந்தை , மரபுக் கவிதை ....ஒப்பிடலாமே....

’அமுதசுரபி’ ஆசிரியர், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அருமையான பதில் :
” குழந்தை அசைந்தசைந்து நடக்கும், மரபுக் கவிதை அசையசையாக நடக்கும். குழந்தை சீரும் சிறப்புமாய் வளரும், மரபுக் கவிதை சீரால் சிறப்புப் பெற்று வளரும். அது அன்பால் தளையிட்டுக் கட்டுப்படுத்தும், இது யாப்பின் தளைக்குக் கட்டுப்படும்.முன்னது அடியெடுத்து நடத்தல் அழகு. பின்னது அடியடியாக வளர்தல் அழகு.”

இதன் தாக்கத்தில் எழுந்த ஒரு சிலேடை வெண்பா:

வண்ண அசைநடையால் மாந்தர் மகிழ்சீரால்
அண்ணி வளரும் அடிகளால் – பண்ணும்நற்
பைந்தமிழ் ஓசையால் பண்டை மரபுசார்
செங்கவிக்கு நேராம் சிசு.

[ ஈற்றடியில் ஒரு மாற்றம் சொன்னவர்: கவிக்கோ ஞானச்செல்வன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: