புதன், 23 மே, 2012

’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி - 2

மிஸ்டர் ராஜாமணி - 2
தேவன்

தேவன்’ 30-களில் விகடனில் எழுதிய மிஸ்டர் ராஜாமணிக் கட்டுரைகளில் இன்னொன்று. இவை இன்னும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரவில்லை. இவற்றிற்கு விகடனில் யார் ஓவியங்கள் போட்டார் என்றும் தெரியவில்லை! ( ‘மாலி’ யோ?)  

==============

ஒரு நாள் மாலை நான் ஆபீஸிலிருந்து சுமார் இரண்டரை மணிக்குத் திரும்பி வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் நுழைந்ததும் எனது அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தபடியாலும், இருவர் உள்ளே பேசும் சப்தம் கேட்டதாலும் சற்று அப்படியே நின்றுகொண்டிருந்தேன். பின்வரும் சம்பாஷணை காதில் விழுந்தது.
''நான் இன்னிக்கி சினிமா போப்போறேனே!''
''அதெல்லாம் இன்றைக்கு நிச்சயமாய்ப் பலிக்காது.''
''அம்பி மாமாகூடப் போப்போறேன்னா, அப்புறம்?''
''பலிக்காது என்றால், அப்புறம்?''
''நான் போவேன்!''
''நீ போகக்கூடாது!''
''உன்னை யார் கேட்டா?''
''நீ யார் சொல்வது?''
''நான்தான் சொல்றேன்; சின்ன ஆசாமணி சொல்றேன். அம்பி மாமா ஆபீஸிலேருந்து வந்துண்டே இருக்காளே, என்னை அழைச்சுண்டு போவாளே!''
''வந்துட்டேனே!'' என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என் அருமை மருமான் சின்ன ராஜாமணியும் என் அக்காளும் பேசிக்கொண்டிருந்தனர். குழந்தையும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கிராப்பை வாரிக்கொண்டு, நிஜாரைப் போட்டுக்கொண்டு தயாராய் நின்றான். என்னைக் கண்டதும் ஓட்ட ஓட்டமாய் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ''மாமா, இன்னிக்குச் சினிமாவுக்கு போகணும், மாமா'' என்றான்.


''இன்னிக்கு சினிமா வாண்டாம்; பீச்சுக்குப் போவோம்'' என்றேன்.
      
''பீச்சுன்னா என்ன?''
''அப்படீன்னால் என்ன?''
''சமுத்திரத்துக்குக்கிட்டே இருக்கும் கரை.''
''அங்கே என்ன பண்றது?''
''உட்கார்ந்து கொண்டிருக்கிறது.''
''எதற்காக?''
''சும்மாத்தான்.''
''சும்மா அங்கே போய் உட்கார வேண்டாம்.''
''பின் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?''
''நீ சினிமாவுக்கு வர்றயா, வல்லையா?''
''வரவில்லை என்றால் என்ன பண்ணுவாய்?''
''அப்போ, நீ வரமாட்டியா?''
''அப்போ வரவேண்டுமா?''
''மாமா, மாமா, வரமாட்டியா நீ?'' என்று கெஞ்சினான்.
நான் தோல்வியடைந்தேனென்று சொல்லவேண்டியதில்லை. சினிமாவுக்குப் போயிருந்தோம். வெகு கவனமாய்ப் படத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு தரமும் அவனுக்குப் படத்தில் வருபவர்கள் யாரென்று சொல்லவேண்டும். ''ஏன் அப்படிப் போனார்கள்? ஏன் அப்படி நின்றார்கள்?'' என்று சொல்ல வேண்டியதுடன் சினிமா எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அவனுக்குப் புரிந்தவரையில் கேட்டுத் திருப்தியடைவான். எங்கள் முன்னிலையில் ஆங்கிலோ / இந்தியக் கனவான் ஒருவர் ஒரு பெரிய தொப்பியை அணிந்து அமர்ந்திருந்தார்

அவருடைய தொப்பி ராஜாமணிக்குப் படத்தை மறைத்ததுபோலும்! குழந்தை என்னிடம் அதைப் பற்றிப் பல தடவை சொல்லியதிலிருந்து நான் அவரை, 'ஸார்! தயவு செய்து கொஞ்சம் தொப்பியை எடுத்தால் நல்லது'' என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஆனால் அப்பெரியார் என்னை நான்கு முறை விழித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். குழந்தைக்குப் பொறுக்க முடியவில்லை.
             


''டேய்!''' என்றான்.
அவர் உக்கிரமாய்த் திரும்பினார். எனக்குச் சற்று பயந்தான்.
''எடடா டொப்பியை, மறைக்கிறது!'' என்றான்.
இதைக் கேட்டுப் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேர்வழிகள் எங்கள் பக்கம் திரும்பிக் கவனித்தனர். ராஜாமணி லக்ஷியமில்லாமல் இருந்தான். அவனுக்குப் பயம் இன்னதென்று தெரியாது. இனிமேல்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.
''எடடா, என்கிறேன், முழிக்கிறாயா?'' என்று நாற்காலியில் ஏறி நின்று கை விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான்.
நான் ராஜாமணியை அடக்கினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பெரியாரும் வாய் பேசாது தம் கிரீடத்தைக் கழற்றினார். கடைசியில் வீட்டுக்குப் போகும்பொழுது, ''சினிமா எப்படி?'' என்றேன். வழக்கம் போல், ''நன்னாவேயில்லை'' என்று பதில் வந்தது.


ராஜாமணியைச் சாதாரணமென்று நினைத்துவிட வேண்டாம். அவன் மதராஸுக்குச் சொற்ப காலம் வந்து விட்டுப் போவதற்குள் ரொம்ப இங்கிலீஷ் கற்றுக் கொண்டு விட்டான்! அதுவும் மேனாட்டார் முறையிலேயே பேசுவான். 'மெட்ராஸ்' என்று சொல்வது பிழையாம். 'மெராஸ்' என்று சொல்ல வேண்டுமென்பான். அவனைக் கொஞ்சம் இங்கிலீஷ் பேசச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?


''அப்பா சொன்னா, 'தி ஸினிமா இஸ் நைஸ்' இன்னு. அம்பி மாமா சொன்னா 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு. நான் சொன்னேன் 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு'' என்பான். இல்லாவிட்டால் 'அப்பா சொன்னா 'அயம் ஸாரி' இன்னு. அம்பி மாமா சொன்னா, 'அயாம் வெர்ரி, வெர்ரி ஸாரி' இன்னு என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான்.
      ராஜாமணிக்கு நெய், சர்க்கரை தின்பதில் வெகு பிரியம். ஆனால் ஒருவருக்கும் தெரியாமல் எடுக்கமாட்டான். அவை வைத்திருக்கும் இடத்தில் தாராளமாகப் போய் நின்றுகொண்டு, 'மெராஸ் காலிங்! தி நெக்ஸ்ட் ஐடம் இஸ்! ஆசாமணி நெய்யைத் திருடறது!'' என்பான். (நாலைந்து தினங்கள் பீச்சில் ரேடியோ கேட்க அழைத்துக்கொண்டு போனதில் குழந்தை இதைக் கற்றுக் கொண்டான்.) உள்ளே போய்ப் பார்த்தால் நெய்யில் ஐந்து விரல்களும் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.


ராஜாமணி சாப்பிடும்போது வெகு விநோதமாய்ப் பேசுவான். இலையில் உட்கார்ந்தவுடன், என்னைக் கூப்பிட்டு,
''பரமானம், பச்சடி, பஸ்ட் வில் கம்.
பொடலங்காய்க்கூட்டு நெக்ஸ்ட் வில் கம்'' என்பான்.
''பருப்பு ரஸம், மோர்க் குழம்பு,
பதிர்ப்பேணி, லட்டு, பால்ப் போளி!
மாமா! ஆல் வெர்ரி நைஸ். வெர்ரி குட்! வெர்ரி ஹாட்'' என்பான்.
ராஜாமணிக்குத் தெரியாத விஷயமே கிடையாது. போதாக்குறைக்கு இரு சாரிகளிலும் பத்து வீடுகளுக்குச் சென்று பல செய்திகள் கொண்டு வந்து விடுவான். அவைகளைக் கேட்காவிட்டால் விடமாட்டான்.


''அவாத்து மாமா சொல்றா, டாக்டர் ஜான்ன்னு ஒத்தனாம்.''
''உம்.''
''அவனுக்கு வெல்லக் கொழக்கட்டை புடிக்குமாம்.''
''சரி.''
''அத்தைத் தின்னா அவனுக்கு வயத்தை வலிக்குமாம்.''
''உம்.''
''பாத்தானாம்...''
''உம்.''
''கொழுக்கட்டை நிறையத் தின்னூட்டு, டுபாக்கி யாலே - டபார்னு - சுட்டூண்டானாம், மாமா!'' என்று சிரிப்பான்.
''காந்தீனு ஒத்தராம்.''
''அப்புறம்.''
''உம்.''
''கோவிலுக்குள்ளே போகணும், விடறியா, மாட்டியா?'' இன்னாராம்.''
''உம்.''
''ஆகட்டும்னு சொல்லியிருக்காளாம்'' என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.
ராஜாமணி எங்களிடம் வந்து வெகு நாட்களாகி விட்டன. அவன் தகப்பனாருடன் ஊருக்குக் கிளம்பினான். அவனைவிட்டுப் பிரியும்பொழுது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டும் குதூகலமாகவும் இருந்த குழந்தையை விட்டுப் பிரிய மிகவும் ஆயாசப்பட்டேன். அவர்களுடன் கூடவே ரெயில்வே ஸ்டேஷனுக்கும் போயிருந்தேன். ரெயில் வந்து கிளம்பும் நேரமாகிவிட்டது. குழந்தை என்னைக் கூப்பிட்டான். அரைத் தலை நிமிர்ந்து நோக்கினேன். அவன் குறும்பைக் காட்டினான்.


''அம்பி மாமா, சமத்தா இருக்கயா?'' என்ன கேட்டான். நான் பேச முடியாமல் மெளனமாய் நின்றேன்.
''மண்ணிலே போகாதே? வெய்யில்லே அலையாதே! அம்மாவைப் படுத்தாதே!'' என்றான். சிரிப்பும் துக்கமும் ஒருங்கே என் மனத்தைத் தாக்கின. உடனே ரெயில் ஊதிற்று. மெதுவாய் நகர்ந்தது. 'குழந்தை எங்கே போய் விடுகிறான்? தகப்பனார் வீட்டுக்குத்தானே?' என்று பலவாறு மனத்தைத் திடம் செய்துகொண்டும் முடியவில்லை. குழந்தை கைக்குட்டையை வீசினான். முகத்தில் புன்சிரிப்பும், போக்கிரித்தனமும் ஒருங்கே ஜ்வலித்தன. ''அம்பி மாமா! மெராஸ் காலிங்... தி நெக்ஸ்ட் ஐடம் ஈஸ் - ஆசாமணி மடுரைக்குப் போறது!'' என்றான். என் கண்ணீரை அடக்க முடியவில்லை. தலை குனிந்து திரும்பி நடந்தேன்.

==========

[ நன்றி : appusami.com; ஓவியம் : நடனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

செவ்வாய், 22 மே, 2012

'தேவன்': மிஸ்டர் ராஜாமணி -1

மிஸ்டர் ராஜாமணி - 1


தேவன்

ஆனந்தவிகடனில் 20 வயது இளைஞனான மகாதேவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’.  1930-32 வாக்கில் வெளியான கட்டுரை. இதைப் படித்த விகடன் ஆசிரியர் ‘கல்கி’ அவனுக்கு  உதவி ஆசிரியர் வேலை கொடுத்து,  மகாதேவனை ‘தேவ’னாக்கினார்.  அதற்குப் பிறகு ‘தேவன்’ பல கட்டுரைகளை இந்தத் தொடரில் எழுதினார்; இவை இன்னும் நூல் வடிவில் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
=====




என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான் குழந்தையிடம் தெரிவித்தேன்.

அவனும் வெள்ளைக்காரர் எவரையும் பார்த்ததில்லை யாகையால் மிகவும் ஆவலுடன் தன்னுடைய நிஜாரையும், சொக்காயையும் மாட்டிக்கொண்டு தயாராய் நின்றான். குழந்தையுடன் துரையின் பங்களாவுக்குக் கிளம்பினேன். போகும் வழி முழுவதும் ராஜாமணி, ''துரை எப்படி மாமா இருக்கும்? அது பேசுமோ? அதுக்கு காலெல்லாம் இருக்குமோ? அது சாப்பிடுமோ? என்னத்தை மாமா சாப்பிடும்?'' என்று பல கேள்விகளும் கேட்டு ஒருவாறு மனத்துக்குள், துரை என்றால் இன்னதென்று ஒரு தீர்மானம் செய்து வைத்திருந்தான்.


எங்களைக் கண்டதும் துரையவர்களும் புன்சிரிப்புடன் வந்து நின்றார். ராஜாமணி அவரைப் பார்த்துவிட்டு, ''இதுதானா துரே! துரேன்னியே, மாமா! கோங்கு மாதிரின்னா இருக்கு'' என்றான். நல்ல வேளையாய்த் துரையவர்களுக்குத் தமிழ் தெரியாது.


''வாட் டஸ் தி பாய் ஸே? (பையன் என்ன சொல்கிறான்?)'' என்றார்.


''உங்களைப் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் என்கிறான்'' என்றேன்.

''கோங்கு துரை பேசறதுடோய்'' என்றான் ராஜாமணி. துரையவர்கள் என்னை நோக்கினார்.

''தனக்கு இங்கிலீஷ் புரியவில்லை என்கிறான்'' என்றேன். துரை குழந்தையை வாரித் தூக்கினார். குழந்தைகளிடம் அவருக்கு மிகவும் அபிமானம். குழந்தைக்கு ஒரு முத்தமும் அளித்தார். துரையவர்கள் காலைப் போஜனத்துக்குப் பிறகு ஸிகரெட் பிடிக்கும் வழக்கமாதலால் அந்த 'வாஸனை' சற்று வீசியிருக்கும்போல் இருக்கிறது. உடனே குழந்தை, ''அம்பி மாமா! கோங்கு துரை வாயெல்லாம் நாத்தமா நார்றதே'' என்று கத்தினான்.

''வாட்?'' என்று துரையவர்கள் ஆங்கிலத்தில் வினவினார்.

''நீங்கள் மிகவும் நல்லவர் என்கிறான்'' என்றேன். புகழ்ச்சியால் திருப்தி யடையாதவர் யார்? நான் சொன்னதைக் கேட்டதும் அவர் அடங்காத சந்தோஷத்துடன். ''ஹா! ஹா! ஹா!'' என்று வாய்விட்டுச் சிரித்து, ராஜாமணியின் முதுகை மெதுவாய்த் தட்டிக்கொண்டு நயமான குரலில், ''வெரி நைஸ் பாய்'' (மிகவும் நேர்த்தியான பையன்) என்றார்.

சின்ன ராஜாமணிக்கு 'வெரி நைஸ்' என்றால் என்ன தெரியுமா? ஏதோ தன்னை வைதுவிட்டதாக மாத்திரம் எண்ணிக்கொண்டான். வெகு கோபத்துடன் என்னிடம் வந்து நின்று, என் கோட்டைப் பற்றிக்கொண்டு துரையைப் பார்த்து, ''நீதான் வெரி! நோக்குத்தான் நைஸ், கோங்குப் பயலே'' என்றான்.

எனக்கு இவனை ஏன் அழைத்து வந்தோமென்று ஆகிவிட்டது. துரைக்கோ இவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை. நான் ஏதாவது சொல்லுவேனோவென்று மீண்டும் மீண்டும் என்னை நோக்கினார். எனக்கும் என்ன சொல்வதென்று தோன்றவில்லை. பின்பு ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு துரையைப் பார்த்து, ''நானும் சீக்கிரம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு உங்களுடன் பேசுகிறேன் என்கிறான்'' என்றேன்.

ராஜாமணியிடம் துரைக்கு உண்மையிலேயே மிகவும் அபிமானம் ஏற்பட்டிருக்கிறதென்பது அவர் முகத்தில் நன்றாய்த் தெரிந்தது. எல்லாக் குழந்தைகளையும் வசியப்படுத்தும் சக்தி தம்மிடம் இருக்கிறதென்றும். குழந்தைகள் ஸ்வபாவமாகவே தம்மிடம் வருவதல்லாமல், ஒருவித மரியாதையும் காட்டுமென்றும் தற்பெருமையாய் ஐந்து நிமிஷம் பேசினார். நானும் முகம் மாறாது ஆமோதித்து வந்தேன்.

அப்பொழுது மூலையில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்த துரையவர்களின் 'டைபிஸ்ட்' தன் வயிற்றைப் பிசைந்துகொண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு மிகவும் வேதனையிலிருப்பவன்போல் துள்ளிக்கொண்டிருந்தான். துரையவர்கள் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர். டைபிஸ்டைப் பார்த்து, ''வாட் ஸ் தி மாட்டர் வித் யூ? (உனக்கு என்ன?)'' என்று கேட்டார்.

''ஸிவியர் ஸ்டமக் ஏக், ஸார் (ரொம்ப வயிற்றுவலி)'' என்று குழறினான் டைபிஸ்ட்.

''டேக் லீவ் அண்ட் ஸம் மெடிஸன் (போ, அப்பேன்! லீவு எடுத்துக்கொண்டு போய் மருந்து சாப்பிடு!)'' என்று தயாளமாய்ச் சொன்னார்.

அவனும் உடனே வெளிச்சென்று மிகவும் வேதனையுடன் வாயிற்படியைக் கடந்து சென்றான். அவன்

வெளியேறினதும் யாரோ ஒருவர் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன். துரையவர்களும் ஏதோ ஞாபகமாய்த் தம் டைபிஸ்டுக்கு அடிக்கடி உடம்பு அஸெளகரியப்படுகிறதென்றும், 'கேர்லெஸ் பெல்லோ', 'ஹெல்த்தைக் கவனிப்பதில்லை'யென்றும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கொல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டு ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலை மேற்படி டைபிஸ்டை வாயிலில் கண்டேன்.

''என்னையா, காலம் கெட்டுக் கிடக்கிறது! எங்கே பார்த்தாலும் ரிட்ரெஞ்ச்மென்டாக இருக்கிறது. உமது மருமானா? அந்த வாண்டுப் பயலை விட்டு வேடிக்கைப் பார்க்கிறீரே! நான் சிரிப்பை அடக்கப்பட்ட பாடு கடவுளுக்குத்தான் தெரியும். நல்ல வேளையாகத் தப்பினேன்'' என்றார்.

ராஜாமணிக்குப் படிப்பில் மிகவும் அவா உண்டு. தமிழில் 'டிக்டேஷன்' போடச் சொல்லி ஸ்லேட்டில் எழுதிக் காண்பிப்பது வழக்கம். ஒரு நாள் ஒரு 'டிக்டேஷன்' கொடுத்து எழுதச் சொன்னேன்.

''ஓர் ஊரில் ஒரு மாடு இருந்தது --'' என்று ஆரம்பித்தேன். இதை எழுதிவிட்டானாவென்று பார்த்தேன். 'ஓர் ஊரில்' 'ஒரு' என்றுதான் எழுதியிருந்தான்.

''உம்'' என்றேன்.

''என்ன மாமா, மாடா?''

''ஆம், மாடுதான், எழுது. ஓர் ஊரில் ஓர் மாடு-- என்னடா எழுதமாட்டே னென்கிறாய்.''

''மாடா, மாமா?'' என்று கேட்டான் மறுபடியும்.

''எவ்வளவு தரம் சொல்லுவது? மாடுதான்!'' என்று அழுத்தமாய்ச் சொன்னேன். அவன் இன்னும் எழுதாதிருப்பதைப் பார்த்து, ''நீ எழுதப் போகிறாயா?'' என்றேன்.

''பால் கறக்குமோல்லியோ, மாமா?''

நான் பதில் சொல்லாமல் காதில் விழாததுபோல் பாவனை செய்தேன்.

''நிறையக் காப்பி அகப்படுமோன்னோ, மாமா?'' என்றான்.

நான் சற்றுத் திரும்பி உட்கார்ந்துகொண்டேன். பிறகு மிகவும் கவலையாய், ''கன்னூட்டியும் இந்துதோன்னோ மாமா?'' என்று கேட்டான்.

''அதெல்லாம் உனக்கென்ன? சொன்னதை எழுதுடா'' என்று பேச்சுக்கு இடங் கொடுக்காமல் சொன்னேன்.

''நம்மாத்திலே ஒரு மாடு வாங்கணும்'' என்று கெஞ்சினான்.

''வாங்குகிறபோது வாங்கலாம். சொன்னதை எழுது என்று அதட்டினேன்.

ஆனால் அவன் என் வார்த்தைகளை லக்ஷியஞ் செய்ததாய்த் தெரியவில்லை. ''ஒரு கன்னூட்டியும் வாங்கறயா, மாமா?'' என்றான்.

குழந்தையை நான் அடிப்பது வழக்கமில்லாதபடியால் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் உட்கார்ந்திருந்தேன்.


''அம்பி மாமா, ஆக்கீலாத்திலே மாடு, கோக்குட்டு, வாங்கிருக்காளே.''

''ஆக்கீல் ஆருடா?'' என்று கேட்டேன். அதற்குள் அவன் தாயார், ''வக்கீல் ஸுப்ரமணிய அய்யராத்திலே 75 ரூபாயில் ஒரு மாடும், குஞ்சலமாட்டமா கன்னுக்குட்டியும் ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்றாள்.

அவ்வளவுதான்; ''நான் போய்ப் பார்த்தூட்டு வர்றேன், மாமா!'' என்று சொல்லிக் கொண்டே சிலேட்டைப் பொத்தென்று கீழே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.

[நன்றி; appusami.com ; ஓவியம்: நடனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதி நினைவுகள்

" பாரதி அறியாத கலை” : செல்லம்மாள் பாரதி
[ கலாரசிகன்; தினமணி: 12 டிசம்பர் 2011]

அகில இந்திய வானொலி நிலையம் 1938 முதல் ஒலிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளாக வெளியிட்டு வருகிறது. இதேபோல, வானொலியில் நிகழ்த்திய உரைகளையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில், திருமதி. செல்லம்மாள் பாரதி, "பாரதி அறியாத கலை' என்கிற தலைப்பில் வானொலியில் பேசிய உரையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

" மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டுக்கு உபதேசித்ததோடு, நாட்டில் பரப்பியதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்! தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார், என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை.

மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ""இனி மிஞ்ச விடலாமோ?'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. "ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ?' என்று திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”
--

பி.கு.
முழு உரையையும் 

இங்கே  படிக்கலாம். 

புதன், 7 டிசம்பர், 2011

கல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை

இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை
கல்கி 




ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.

இவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:

“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்” 

ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.
இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:


நூல் : இராஜாம்பாள்
ஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு


'மோசம் போனேன்...' என்னும் தலைப்பில் கல்கி எழுதிய நூல் மதிப்புரை


''நான் யார்? என்ற விசாரணையில் இறங்கிய வேதாந்திகள் அதிலிருந்து மறுபடி வெளிக்கிளம்புவதே யில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம் - அதாவது உண்ட உணவு ஜீரணமாகும்வரையில் பசி வந்ததோ இல்லையோ, வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் பறந்து போய் ''நான் கேவலம் ஒரு வேளைப் பசி தாங்கமுடியாத ஒர் அற்பப் பிராணி'' என்ற ஞானம் அவர்களுக்கு உண்டாகிறது. உடனே பக்கத்திலுள்ள ''பிராமணாள் கிளப்''பில் நுழைந்து ''முக்கால் சேர் காப்பி கொண்டா!'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்?'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார்? இப்போதுள்ள நான் யார்? இருவரும் ஒன்று தானா? வேறு வேறு ஆசாமிகளா? என்ற சந்தேகம் நம்மெல்லாரையும் சிலசில சமயம் பிடித்துக் கொள்கிறதல்லவா?


அந்தக் காலத்திலே நாம் செய்த சில காரியங்களை நினைத்துக் கொண்டால் நமக்கே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. அப்போது நாம் ரஸித்த விஷயங்களெல்லாம் இப்போது சுத்த அசட்டுத்தனமாய்த் தோன்றுகின்றன. அப்போது நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது. நமக்கு மட்டுந்தான் இது என்பதில்லை. பெரிய பெரிய மனிதர்களுடைய சமாசாரங்கூட இப்படித்தான்.

இன்றைய தினம் நாம் உலக சிரேஷ்டர் என்று கொண்டாடி பயபக்தி விசுவாசத்துடன் வரவேற்கும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாதத்துக் குழந்தையாயிருந்தபோது அவருடைய வீட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம்.

தாயார் குழந்தையைத் தொட்டிலில் இட்டு, அண்ணணைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சமையலறையில் காரியமா யிருக்கிறாள். அண்ணன் திடீரென்று ''அம்மா! ஒடி வா! ஒடி வா! ஓர் அதிசயம்!'' என்று கத்துகிறான். அந்த கூச்சலைக் கேட்டு அம்மா, அப்பா எல்லாரும் ஓடி வருகிறார்கள்.

''என்னடா அதிசயம்?''

''குழந்தை வாயில் விரல் போட்டிண்டிருக்கு, அம்மா!'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு!'' என்று அம்மா குதிக்கிறாள்; அப்பா கூத்தாடுகிறார்.

மெதுவாகக் கட்டை விரலை வாயிலிருந்து எடுக்கிறார்கள். குழந்தை 'வீல்' என்று கத்துகிறது. மறுபடியும் போடுகிறார்கள். அழுகை நின்று விடுகிறது.

அந்தக் கட்டை விரலில் அப்படி என்னதான் ருசியிருக்குமோ?

அது அந்தக்காலம்! இப்போது வேண்டுமானால், யாராவது காந்திஜியைப் பேட்டி கண்டு அந்த நாளை ஞாபகப்படுத்தி, ''தங்கள் கைக் கட்டை விரலில் ஏதாவது தேன், கீன் ஊறுகின்றதா?'' என்று கேட்டுப் பாருங்கள். பொக்கை வாய் சிரிப்பைத் தவிர வேறு பதில் கிடைக்காது.

எல்லாருடைய விஷயமும் இப்படித்தான். அந்தக் காலத்தில் நமக்கிருந்த ருசிகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன.

அப்போது நாம் பாட்டிகளிடம் கேட்ட ''ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராஜாவாம்'' என்று தொடங்கும் கதைகள் நமக்குப் பரமானந்தம் அளித்தன. காக்கை, நரி, கழுதைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டு நினைவுகூட இருப்பதில்லை. இப்போதோ 'விகட'னில் சிறுவர் பகுதிப் பக்கங்களை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு மேலே படிக்கிறோம்.

அப்போது கேட்டு அநுபவித்த பாட்டுக்கள் எல்லாம் இப்போது சுத்த அபத்தமாய்த் தோன்றுகின்றன. அந்நாளில் இரவெல்லாம் கண் விழித்து படித்த புத்தகங்களோ? கடவுளே! இப்போது கூலி கொடுத்துப் படிக்கச் சொன்னால் கூடப் படிக்க மாட்டோம்!

ஆகவே, பதினைந்து வருஷத்துக்கு முந்தியிருந்த ''நானும்'' இப்போதுள்ள ''நானும்'' ஒரே ஆசாமிதானா என்ற சந்தேகம் எனக்கு மிகவும் பலமாக உண்டு. இதனால்தான் 'இராஜாம்பாள்' என்னும் நாவலின் 26ஆம் பதிப்பு மதிப்புரைக்காக வந்து மூன்று மாதத்துக்கு மேலாகியும் அதை எடுத்துப் படிப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நமது வாழ்நாளில் என்ன என்ன விஷயங்கள் மனதில் ஆழ்ந்து பதிகின்றனவோ அவைதாம் அந்திம காலத்தில் மனதில் தோன்றும் என்று சொல்கிறார்கள். காலஞ்சென்ற கோபாலகிருஷ்ண கோகலே மரணத் தறுவாயிலிருந்த போது ''பகவானை நினையுங்கள்'' என்று பக்கத்திலிருந்தவர்கள் சொன்னார்களாம். அவர் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ''என்ன செய்வேன்? கண்ணை மூடினால் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விவரங்களும், அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களும், சட்ட நுட்பங்களுத்தான் மனதின் முன் நிற்கின்றன. என்ன முயன்றாலும் பகவான் நினைவு வரவில்லை'' என்றாராம்.

இதுபோலவே என்னுடைய அந்திம நாளில் மனதில் தோன்றும் விஷயங்களுக்குள் ''மோசம் போனேன், கோபாலா! என்னைச் சுடலை மாடன் கோவில் தெரு 29வது நம்பர் வீட்டிலுள்ள குதிரில்...'' என்னும் வாக்கியம் முதன்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.

சென்னைப் பட்டணத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வந்த ஒருவர் ''இராஜாம்பாள்'' என்னும் துப்பறியும் நாவலைக் கொண்டு வந்தார். அவர் அதைப் படித்து முடிக்கும் வரையில் பக்கத்திலேயே காத்திருந்து அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அன்றிரவு புகைந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் புத்தகத்தை ஒரே மூச்சாகப் படித்து முடித்து இரவு சுமார் மூன்று மணிக்குத் தூங்கச் சென்றது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.


மறுநாள் பொழுது விடிந்ததும் மறுபடியும் ஒரு தடவை அடியிலிருந்து கடைசிவரையில் படித்து முடித்தேன். புத்தகத்தைப் பற்றி அப்போது நான் கொண்ட அபிப்பிராயம் என்னவென்பதை உடனே என் நண்பனிடம் தெரிவித்தேன். அது என்னவென்றால், ''இதோ பார், முத்து! இந்த மாதிரி புத்தகம் தினம் ஒன்று மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் எனக்கு வேறொன்றும் வேண்டாம். 'ராபின்ஸன் க்ரூஸோ'வைப் போல் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்'' என்றேன்.

'பாரிஸ்டர் கொக்குதுரை' என்ற பெயரைப் படித்தபோது என்ன சிரிப்பு வந்தது? வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது? இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது? கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம்! அந்த சமயத்தில் ஏதோ ஒரு தேர்தல் நடந்து துப்பறியும் கோவிந்தனும், லோகமான்ய திலகரும் அத்தேர்தலில் போட்டியிட்டார்களானால் துப்பறியும் கோவிந்தனுக்கே என்னுடைய வோட்டைக் கொடுத்திருப்பேன்!

இளம் பிராயத்தில் இவ்வளவு தூரம் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புஸ்தகம் இப்போது மற்றும் பலவற்றைப் போல் ரஸமற்றதாய்த் தோன்றப் போகிறதே என்ற பயத்தினால்தான் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரண்டு, மூன்று தடவை ஞாபகப்படுத்தப்பட்ட பின்னர் எடுத்துப் படித்த போது மேற்சொன்ன பயத்துக்கு அதிக காரணமில்லை யென்றறிந்து பெருமூச்சு விட்டேன்.

மேனாட்டில் ஆசிரியர்கள் அற்புதமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதுகிறார்களென்றும், தமிழ்நாட்டில் அவ்வாறு எழுதக் கூடியவர்கள் இல்லையென்றும் சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். மேனாட்டு ஆசிரியர்கள் மகா கெட்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டுக் கதை எழுதச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் கெட்டிக்காரத்தனமெல்லாம், முழிமுழியென்று முழிப்பார்கள்.

சுமார் ஒரு வருஷ காலத்திற்குப் பிறகு சென்ற வாரத்தில் மேனாட்டு மாத சஞ்சிகை யொன்றை நான் படித்தேன். அதில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எட்டுக் கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்.

1. ஐம்பது வயதான மனிதன் ஒருவன் வாலிபனைப் போல் குதூகலமுள்ளவனாயிருக்கிறான்; ஓர் இளம் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே நேசம் உண்டாகிறது; அம்மனிதனுடைய சொந்த மனைவி இதை அறிந்தாள். அவனுக்குச் சில சமயம் காச நோய் வருவதுண்டு; சில அபத்தியமான காரியங்களைச் செய்து அந்தப் பெண்ணின் முன்னிலையில் தன் புருஷனுக்கு காசம் வருமாறு செய்கிறாள். அப்போது அவன் ஒரு நோயாளிக் கிழவன் என்பதை அவ்விளம்பெண் உணருகிறாள். அத்துடன் அவர்கள் காதல் முடிகிறது.

2. மனைவியை இழந்த ஒரு கணவன் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் விடுகிறான். அக்குழந்தைக்குச் சிகிச்சை செய்த 'நர்ஸி'ன் மேல் அவன் காதல் கொண்டு முடிவில் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான்.

3. இரண்டு இளைஞர்கள். ஒரு பெண். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைப் பற்றி விளையாட்டாகப் பரிகசித்து எழுதியதை மற்றவன் எழுதியதாக அந்தப் பெண் எண்ணிக் கொண்டு அவன் மேல் காதல் கொண்டிருந்தும், தன்னிடம் வர வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். தன் தகப்பனாருடைய தூண்டுதலால் மற்றொருவனைக் கலியாணம் செய்து கொள்ள இசைகிறாள். கலியாணம் நடப்பதற்குக் கொஞ்சம் முன்னால் அவளுக்கு உண்மை தெரிந்து பழைய காதலனையே மணந்து கொள்கிறாள்.

4. வட துருவப் பிரதேசங்களில் ஸர்வே செய்வதற்காக ஒரு கப்பல் போகிறது. அங்கே எஸ்கிமோப் பெண் ஒருத்தியின் காதல் காரணமாக ஒரு கொலை நடக்கிறது.

5. ஒரு ஹோட்டல்காரனுடைய வளர்ப்புப் பெண்ணை டம்பாச்சாரி ஒருவன் இச்சிக்கிறான். அவளை அடைவதற்காக அந்த ஹோட்டல்காரன் மீது பொய்யான கொலைக்குற்றம் சாட்டுகிறான். பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு இணங்கச் சம்மதிக்கிறாள். கடைசி நேரத்தில் உண்மைக் குற்றவாளி வெளிப்பட்டு டம்பாச்சாரிக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

6. உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட ஒரு பத்திராதிபரிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஓர் இளம்பெண் வருகிறாள். இருவரும் காதல் கொண்டு எகாந்தமான ஒரு காட்டுப் பிரதேசத்திற்குப் போய் வசிக்கிறார்கள். அங்கே ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவன் அவர்களுடைய குடிசையில் வந்து சரணாகதி அடைகிறான்; பெண் அவனுக்கு அபயமளிக்கிறாள்; புருஷன் அவன் மீது பொறாமை கொண்டு போலீஸ்காரரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். அந்தப் பெண், கைதியைப் பின் தொடர்ந்து சென்று சிறைக்கு வெளியே இருந்து வேண்டிய உதவி செய்து வருகிறாள். கடைசியில் அவன் இறந்த பிறகு புருஷனிடம் வந்து சேருகிறாள்.

7. ஷாங்காயில் அமெரிக்கத் தூதர் நடத்திய விருந்துக்குப் பிரிட்டிஷ் தூதரின் காரியதரிசி கழுத்தில் கருப்புச் சுருக்குடன் போய் விடுகிறான். அதன் பலனாகப் பெரிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. கடைசியில் அவனுடைய காதலியான அமெரிக்க தூதரின் பெண் சிபார்சினால் சமரசம் ஏற்படுகிறது.

8. கடைகளில் வேலை செய்த சில பெண்கள் சில இளைஞர்களுடன் விடுமுறை நாளைக் கழித்துவர பிரயாணம் செய்கிறார்கள். எல்லாரிலும் சாதுவான ஒருத்தியைச் சமைக்கச் செய்யச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஆற்றில் படகோட்டிக் கொண்டு செல்கிறார்கள். எல்லாரும் போன பிறகு அங்கு ஒரு இளைஞன் வந்து சேருகிறான். அவனும் சமையலுக்கு விடப்பட்ட பெண்ணும் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வளவு கதைகளும் மேனாட்டாரின் சமூக வாழ்க்கைக்கு முற்றும் பொருத்தமாகவும், இயற்கையாகவும் காணப்படுகின்றன. இதே விதமாக ஆங்கில பாஷையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கதைகளும் நாவல்களும் எழுதப்படுகின்றன. அவைகளில் மிகப் பெரும்பாலானவை காதல் சம்பவங்களே.

தமிழ்நாட்டில் நல்ல கதைகள் எழுதப்படவில்லையென்றால் எங்கிருந்து எழுதுவது?

வரதக்ஷணையின் கொடுமை, சிறு பெண்ணைக் கிழவன் கலியாணம் செய்து கொள்வது, பால்ய விதவையின் துயரங்கள் - இவைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப நமது நாட்டில் கதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றனவென்றால் அதற்கு யார் என்ன செய்யலாம்?

நமது சமூக வாழ்க்கை காதல் கதைகளும், நாவல்களும் எழுதுவதற்குப் பொருத்தமானதாய் இல்லையென்பது உண்மை. (இது நல்லதா, கெடுதலா என்பது வேறு விஷயம்)

இத்தகைய சாரமற்ற சமூக வாழ்வை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரீமான் ரங்கராஜு இவ்வளவு ருசிகரமான நாவலை எப்படி சிருஷ்டித்தார் என்று எனக்குள்ள ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. இதை உத்தேசிக்கும் போது இந்த நாவலில் பொருத்தமற்றதாகக் காணப்படும் சில விஷயங்களைப் பெரிதாகக் கருதக் கூடாதென்று தோன்றுகிறது.

இந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது?

ஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்கி' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.

ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு நெருடல். இராஜாம்பாளின் வாய் மொழியாக அவர் பின்வரும் வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.

''ஜோஸ்யர்களுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், என் தகப்பனார் பொருத்தமில்லாவிட்டாலும் தங்களுக்கே என்னைக் கலியாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் இராமண்ணாவும் யோசனை செய்து, போலீஸ் புலியாகிய மணவாள நாயுடுவுக்குப் பலமாய் லஞ்சங் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து, எனது தகப்பனாரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஜனில் அடைத்து அவர் பயப்படும்படியான வகைகளெல்லாம் செய்து, கடைசியில் இராமண்ணாவையும் உள்ளேவிட்டு, நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கலியாணஞ் செய்து கொடுப்பதாக என் தகப்பனாரை வாக்களிக்கும்படி சொல்ல, அவர் தம் பிராணன் போனாலும் அப்படிச் செய்ய மாட்டேனென்று சொன்னதின் பேரில், தங்களைப் பிடித்து ஜெயிலில் அடைக்க உத்தேசித்திருப்பதாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் ஹிம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப்பிய ஓர் கைதியினால் கொல்லப் படுவாரென்றும் இராமண்ணா பிரமாணமாய்ச் சொன்னதின் பேரில், என் தகப்பனார் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தைக் கொண்டு வாக்களித்ததாகவும் என்னிடம் சொன்னார்.''

இதைப் படித்தபோது, இப்படிப் பேசியது உயிரும், இரத்தமும், தசையும் உள்ள ஒரு பெண்ணா அல்லது 'ரோபோ' என்று மனிதனைப் போலவே பேசிக் காரியமும் செய்யும் புதிய இயந்திரம் கண்டுபிடித்திருப்பதாய்ச் சொல்லுகிறார்களே, அதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் இந்த வாக்கியம் இராஜாம்பாள் கோபாலனிடம் சொன்னதாக கோபாலன் கோவிந்தனிடம் சொல்வதில் காணப்படுகிறது. எனவே, இந்த கோபாலன் என்பவன் உண்மை மனிதனா, 'ஹம்பக்' பேர்வழியா என்னும் சந்தேகம் உதயமாயிற்று. ஆனால் இவையெல்லாம் சில்லரை விஷயங்கள். முக்கியமான அம்சத்தில், அதாவது கதையின் சுவையைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் நான் கொண்ட அபிப்பிராயமே இப்போதும் ஊர்ஜிதமாயிற்று. அன்று போலவே இன்றும் ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்து முடித்தேன். புத்தகத்தைக் கீழே வைத்ததும் அடுத்த முறை காஞ்சீபுரம் போனால் கோபாலனையும், இராஜாம்பாளையும், பேரன் பேத்திகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சாமிநாத சாஸ்திரிகளையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. அவர்களை ''ஆனந்த விகடன்'' இலவச ஜாப்தாவில் சேர்த்துப் பத்திரிகை அனுப்பலாமேயென்றும் எண்ணினேன்.

''இராஜாம்பாள்'' ஒரு ஜீவசக்தி வாய்ந்த நாவல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

-ஆனந்த விகடன், 17-12-1934
=================
[நன்றி:  http://www.appusami.com ]


தொடர்புள்ள பதிவுகள்;

கல்கி கட்டுரைகள்

கல்கியைப் பற்றி .

1)

இராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி ராண்டார் கை ’ஹிந்து’வில் எழுதிய குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

இராஜாம்பாள் திரைப்படம்: 1951: ராண்டார் கையின் கட்டுரை

2)

ரங்கராஜுவின் ‘மோஹனசுந்தரம்’என்ற நாவலைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சுட்டியில் படிக்கலாம்.


மோஹனசுந்தரம்: கதைப் பாத்திரங்கள்