சனி, 24 டிசம்பர், 2016

கல்கி - 13

ஈ.வே.இராமசாமி நாயக்கர்
'கல்கி'



டிசம்பர் 24.  பெரியாரின் நினைவு தினம்.

அவரும், அவர் மனைவி  மணியம்மையும் சென்னையில், தியாகராயநகரில் பஸ்லுல்லா ரோடில்  இருந்த இராஜாஜியின் வீட்டிற்கு வருவதை, மற்ற சிறுவர்களுடன் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வருகிறது.  1948/49  என்ற நினைவு. வாசல் வரை ”கறுப்புக் கண்ணாடி’ இராஜாஜி வந்து கைகூப்பி விடைகொடுப்பதும், கறுப்புச் சால்வை போர்த்திய பெரியாரும், மணியம்மையும் பதிலுக்குக் கைகள் கூப்பி விடை பெறும் காட்சியும் மனத்தில் நிரந்தரப் பதிவு.

பெரியாரைப் பற்றி ‘கல்கி’ 1931 விகடனில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இதோ!
===========

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன். சாதாரணமாக, இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால் கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டுவிடும். எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது.

தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன். இருக்கலாம். ஆனால், அவர் உலகாநுபவம் என்னும் கலா சாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!

[ நன்றி: விகடன் காலப் பெட்டகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
'கல்கி’ கட்டுரைகள்
வாசனைப் பற்றி : பெரியார் 

கருத்துகள் இல்லை: