ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தி.வே.கோபாலய்யர் - 2

தி.வே.கோபாலய்யர் 10
ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜனவரி 22. சிறந்த தமிழ் அறிஞரும், ‘தமிழ் நூற்கடல்’ என்று போற்றப்பட்டவருமான தி.வே.கோபாலய்யர்  பிறந்த தினம் இன்று.


 அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் (1925) பிறந்தவர். தந்தை அரசு ஊழியர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு, திருவையாறு அரசர் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்றார். 1945-ல் புலவர் பட்டம் பெற்றார். மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார்.

l அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிஓஎல் பட்டம், மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம், ஹானர்ஸ் பட்டம் ஆகியவற்றில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

l இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை ஆழமாக கற்றறிந்தவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமை மிக்கவர். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். படிக்கத் தொடங்கிவிட்டால் வேறு எதுவுமே அவர் கண்ணில் படாது. தான் படித்தவற்றை மற்றவர்களுக்கு, குறிப்பாக தன் மாணவர்களுக்குத் தெரிவிப்பதை முதல் கடமையாக கொண்டிருந்தார்.

l திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். மரபுவழித் தமிழ் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவரது வகுப்பறை குருகுலக் கல்வி போல இருந்தது. இவரிடம் தமிழ் கற்றவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

l புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் கலை நிறுவனத்தில் 1979-ல் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். இப்பணியை வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தார்.

l எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.

l பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரிய புராணம், கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பற்றி பல ஊர்களில் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அவற்றை அறிமுகம் செய்தார்.


l செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ் நூற்கடல்’ என்றும் போற்றப்பட்டார்.

l தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என எதுபற்றி கேட்டாலும், நூல்களைப் பார்க்காமலே எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.

l ‘பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலய்யர் இருந்தால் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்’ என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட மனிதக் கணினியாகத் திகழ்ந்தவர். ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், ஆய்வாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட தி.வே.கோபாலய்யர் 82-வது வயதில் (2007) மறைந்தார்.

[ நன்றி : தி இந்து ]

தொடர்புள்ள பதிவுகள்:
தி.வே.கோபாலையர்

கருத்துகள் இல்லை: